வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதி என்று இருந்தாலும் கண்டிப்பாக ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் காலநீட்டிப்பு வழங்கப்படும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் மத்திய அரசு ஜூலை 31-ஆம் தேதிக்கு மேல் காலநீட்டிப்பு இல்லை என்று கூறியுள்ளது. இந்த தகவல் வருமான வரி செலுத்துபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய அனைவரும் தயாராகி வருகின்றனர்.
நீங்களும் இதுவரை வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், உடனே தாக்கல் செய்வதற்கான பணியை தொடங்க அறிவுறுத்தப்படுகிறது
நீட்டிப்பு இல்லை
நீங்கள் இதுவரை உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், உங்களுக்கான ஒரு பெரிய அப்டேட். ஐடிஆர் 2022ஆம் ஆண்டுக்கான தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்தார். ஜூலை 31-ம் தேதிக்குள் பெரும்பாலான ரிட்டன்கள் வந்து சேரும் என எதிர்பார்ப்பதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதிகரிக்கும் தாக்கல் எண்ணிக்கை
2021-22 நிதியாண்டில் ஜூலை 20 ஆம் தேதிக்குள் 2.3 கோடிக்கும் அதிகமான வருமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இன்னும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வருவாய்த்துறை செயலாளர் மேலும் கூறினார்.
தினமும் 15-18 லட்சம் ஐடிஆர் தாக்கல்
வருமான வரி தாக்கல் செய்ய தேதிகள் நீட்டிக்கப்படும் என்று மக்கள் நினைத்து ஆரம்பத்தில் தாக்கல் செய்வதில் கொஞ்சம் மெதுவாக இருந்தாலும் இப்போது தினமும் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமானவரி தாக்கல் பணி நடைபெறுகிறது. இது 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
காத்திருப்பு
பொதுவாக ஐடிஆர் ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் வரை காத்திருப்பார்கள்., கடந்த முறை 9-10 சதவீதம் பேர் கடைசி நாளில் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த முறை ஆரம்பம் முதலே ஐடிஆர் தாக்கல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தணிக்கை
பல்வேறு வகைகளின் அடிப்படையில் வருமான வரிக் கணக்கின் கடைசித் தேதி ஒரு வரி செலுத்துபவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறுபடும் என்பதை வரி செலுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும். தணிக்கை தேவையில்லாத சம்பளம் பெறும் ஊழியர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஐடிஆரை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
7 வகை ஐடிஆர் படிவங்கள்
ஐடிஆர் தாக்கல் செய்வதன் மூலம், சம்பளம் பெறும் தனிநபர் வருமானம் மற்றும் அந்த ஆண்டில் செலுத்த வேண்டிய வரிகள் பற்றிய தகவல்களை இந்திய வருமான வரித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக, வருமான வரித்துறை 7 வகையான ஐடிஆர் படிவங்களை வெளியிட்டுள்ளது. அதன் பொருந்தக்கூடிய தன்மை வருமானத்தின் தன்மை மற்றும் அளவு மற்றும் வரி செலுத்துபவரின் வகையைப் பொறுத்தது.
எளிய முறை
வரி செலுத்துவோரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள், ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்வது மிகவும் எளிதாகிவிட்டதாகவும், மிக விரைவான நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதாகவும் தருண் பஜாஜ் மேலும் கூறினார்.
இன்னும் அதிகரிக்கும்
முன்பு தினமும் 50,000 பேர் ரிட்டர்ன் தாக்கல் செய்து வந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும், மக்கள் அதிகளவில் தங்கள் ரிட்டன்களை தாக்கல் செய்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்' என்றார்.