உலக வங்கியில் ஏற்கனவே கௌசிக் பாசு என்ற இந்தியர் தலைமை பொருளாதார நிபுணராக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது இந்தியர் ஒருவர் தலைமை பொருளாதார நிபுணர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் என்ற பெருமைமிகு பதவியை பெற்ற இரண்டாவது இந்தியர் இன்டர்மிட் கில் ஆவார்.
உலக வங்கியின் முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இன்டர்மிட் கில் அவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர்
கௌசிக் பாசுவுக்கு பிறகு, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் வழங்கும் சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணரான இரண்டாவது இந்தியர் இன்டர்மிட் கில் ஆவார்.
கெளசிக் பாசு
2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை உலக வங்கியின் முக்கிய பதவிக்கு கெளசிக் பாசு தலைமை வகித்தார். இந்தியாவின் இரண்டு முக்கிய பொருளாதார நிபுணர்களான ரகுராம் ராஜன் மற்றும் கீதா கோபிநாத் ஆகியோர் உலக வங்கியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர்களாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டர்மிட் கில்
இன்டர்மிட் கில் அவர்களின் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் என்ற பதவியின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என்று உலக வங்கி ஜூலை 21 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் வாழ்த்து
உலகெங்கிலும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வளர்ச்சி, வறுமை, நிறுவனங்கள், மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் தலைமைத்துவம், விலைமதிப்பற்ற நிபுணத்துவம் மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவற்றினை இன்டர்மிட் கில் சிறப்பாக கொண்டு வருவார் என தான் நம்புவதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தனது வாழ்த்துக்குறிப்பில் கூறியுள்ளார்.
பொதுக் கொள்கை பேராசிரியர்
இன்டர்மிட் கில் தற்போது சமமான வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்களுக்கான உலக வங்கியின் துணைத் தலைவராக உள்ளார். அங்கு அவர் மேக்ரோ பொருளாதாரம், கடன், வர்த்தகம், வறுமை மற்றும் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அவர் டியூக் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை பேராசிரியராகவும், ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் மூத்த சக ஊழியராகவும் இருந்தார்.
பொருளாதார புவியியல்
"பொருளாதார புவியியல்" பற்றிய செல்வாக்குமிக்க 2009ஆம் ஆண்டின் உலக வளர்ச்சி கூட்டத்திற்கு இன்டர்மிட் கில் தலைமை தாங்கினார். ஒரு குறிப்பிட்ட அளவிலான வருமானத்தை அடைந்த பிறகு வளரும் நாடுகள் எவ்வாறு தேக்கமடைகின்றன என்பதை விவரிக்க "நடுத்தர வருமான பொறி" என்ற கருத்தை அறிமுகப்படுத்துவது அவரது முன்னோடி பணிகளில் ஒன்றாக இருந்தது. வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கை பிரச்சனைகள், இறையாண்மை பிரச்சனை, பசுமை வளர்ச்சி, தொழிலாளர் சந்தைகள், வறுமை மற்றும் சமத்துவமின்மை மற்றும் இயற்கை வளங்களை நிர்வகித்தல் போன்றவற்றை அவர் விரிவாக அந்த அறிக்கையில் வெளியிட்டார்.
பேராசிரியர்
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இன்டர்மிட் கில்இருந்துள்ளார். நோபல் பரிசு பெற்ற கேரி பெக்கர் மற்றும் ராபர்ட் இ. லூகாஸ் ஜூனியர் ஆகியோர்கள் இன்டர்மிட் கில் அவர்களின் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.