ஜூன் மாதத்தில், இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கியதில் இருந்து, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பிரச்சனைகள், வெறுமனே எல்லைப் பிரச்சனையாக இல்லை.
Recommended Video
அது ஒட்டு மொத்த சீனாவுக்கும் இந்தியாவுக்குமான உணர்வுப் போராட்டமாக மாறிவிட்டது. இந்திய மக்களிலேயே பலர், சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்கிற எண்ணத்துக்கு மாறிவிட்டார்கள். மத்திய அரசும் அவ்வப் போது, சீனாவுக்கு சில தடைகள் மூலம் பாடம் புகட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இப்போது, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங், ஒரு புதிய தடையை விதித்து சீனர்களுக்கு எல்லாம் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
மின்சாரத் துறை
சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்கு மின்சார சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங். இது நிச்சயமாக சீனாவுக்கு, ஒரு 440 வாட் ஷாக் அடித்தது போலத் தான் இருக்கும்.
அமைச்சர் பேச்சு
இன்று இந்தியாவில், நமக்குத் தேவையான மின்சார உற்பத்தி (Power Generation) மற்றும் மின்சார பகிர்மானம் (Power Distribution & Transmission) தொடர்பான எல்லா உபகரணங்கள் மற்றும் கருவிகளை நாமே தயாரிக்கிறோம். இருப்பினும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்தியா 71,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார சாதனங்களை இறக்குமதி செய்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ஆர் கே சிங்.
சீனா மட்டும் 21,000 கோடி
2018 - 19 நிதி ஆண்டில் இறக்குமதி செய்த மொத்த 71,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியில், 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிகள் சீனாவில் இருந்து வந்தவைகள் எனவும் விளக்கி இருக்கிறார் அமைச்சர் ஆர் கே சிங். சீனா நம்மை ஆக்ரமிக்கும் போது கூட, சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் மின்சார சாதனங்களுக்கான இறக்குமதி ஆர்டர்களைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார்.
தடை முடிவு
இந்தியாவில் எந்த ஒரு மின்சார சாதனங்கள் இறக்குமதி செய்யவும், முறையாக அனுமதி பெற வேண்டும். சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மின்சார சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கமாட்டோம் என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார் ஆர் கே சிங். மேலும், எலெக்ட்ரிசிட்டி க்ரிட்டுகள் மால்வேர்களால் பாதிக்கப்படக் கூடியவைகளே. இதனால் நம் இந்தியாவில் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.
கூடுதல் வரி
மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் சோலார் மின்சார சாதனங்களுக்கு ஆகஸ்ட் 01, 2020 முதல் 25 % கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இந்த வரியை அடுத்த ஆண்டில் 40 சதவிகிதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்து இருக்கிறார்களாம்.
தடை மேல் தடை
சில மாதங்களுக்கு முன், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு முதலீடு செய்வதில் சில தடைகளை விதித்தது. கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனைக்குப் பின், சில சீன காண்டிராக்ட்களை ரத்து செய்தார்கள். சீனாவின் பிரபலமான 59 செயலிகளுக்கு தடை விதித்தார்கள். இப்போது மின்சார சாதனங்கள் இறக்குமதிக்கும் தடை விதித்து இருக்கிறார்கள். இன்னும் சீனா என்ன மாதிரியான தடைகளை எல்லாம் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.