இந்தியா - சீனா எல்லை பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காண இரு அரசுகளும் முயற்சி செய்து வரும் நிலையில், இந்தியா சீனாவின் வர்த்தக இணைப்பைக் குறைக்க மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கனவே சீன முதலீடுகளை இந்திய சந்தையில் குறைக்கப் பல விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ள வேளையில், சீன பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்க மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் சீன ஆதிக்கத்தை இந்தத் திட்டங்கள் மூலம் குறிப்பிட்ட அளவிற்குத் தடுக்க முடிந்தாலும், முழுமையாகச் செய்ய முடியாது என்பதே உண்மை.
இந்நிலையில் சீனா-வை நம்பியிருக்கும் 5 முக்கியமான இந்திய நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
டாடா மோட்டார்ஸ்
என்னது டாடா மோட்டார்ஸ் -ஆ.. என்று அதிர்ச்சி அடைய வேண்டும், இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நிறுவன சீன முதலீட்டையும், சீன சந்தையை நம்பி தான் இருக்கிறது. இதற்கு டாடாவும் விதிவிலக்கு அல்ல என்பது தான் உண்மை.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார், டிரக், பஸ், ராணுவ வாகனம் எனப் பலவற்றை டாடா மோட்டார்ஸ் தயாரித்து விற்பனை செய்து வந்தாலும், இந்த நிறுவனத்திற்குச் சுமார் 80 சதவீத வருமானம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து தான் வருகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மிக முக்கியமான வர்த்தகச் சந்தை என்றால் சீனா தான், மார்ச் 2021ல் சீனா கொரோனா பிடியில் இருந்து முழுமையாக மீண்ட காரணத்தால் அந்நாட்டில் ஜாக்வார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இதன் வாயிலாகவே டாடா மோட்டார்ஸ் மார்ச் காலாண்டில் லாபத்தை அடைந்தது.
சொல்லப்போனால் இக்காலகட்டத்தில் சீனாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து, சீன சந்தைக்காகச் சீனாவிலேயே உற்பத்தி பணிகளைச் செய்யச் செர்ரி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி வைத்துள்ளது. சீன சந்தை மட்டும் இல்லை என்றால் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வர்த்தகம் வருமானம் குறைந்து டாடா மோட்டார்ஸ் மோசமான நிலையை அடையும்.
விஐபி இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் மிகப்பெரிய லக்கேஜ் மற்றும் டிராவல் பொருட்கள் விற்பனை நிறுவனமான விஐபி இண்டஸ்ட்ரீஸ் தனது 50 சதவீத உற்பத்தியைச் சீனாவில் தான் செய்கிறது. சீனாவில் உற்பத்தியை நிறுத்திவிட்டால் விஐபி இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ளும்.
விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சாப்ட்-லக்கேஜ் பிரிவின் மூலமாகவே அதிகளவிலான வருமானத்தைப் பெறுகிறது, இப்பிரிவு பொருட்கள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்படுகிறது. விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிராந்திய மற்றும் forex ஆபத்து இதன் மூலம் விளங்குகிறது.
விஐபி தற்போது மொத்த விற்பனை பொருட்களில் 88 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் சீன சந்தையை விட்டு விஐபி இண்டஸ்ட்ரீஸ் விலக வேண்டும் என்றால் இதன் அளவை 25 சதவீதமாகக் குறைத்து, இந்தியாவில் இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் செய்ய முடியவில்லை எனில் பங்களாதேஷ் நாட்டில் தற்போது மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து உற்பத்தி தளத்தை மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் விஐபி இண்டஸ்ட்ரீஸ் பங்களாதேஷ் நாட்டிற்குக் கூடத் தனது உற்பத்தியைக் கொடுக்கலாம்.
வோல்டாஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஏசி மற்றும் கூலிங் சிஸ்டம் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான வோல்டாஸ் சீனா-வின் உற்பத்தியை நம்பி தான் பெருமளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் வோல்கார்ட் பிரதர்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் 1954ஆம் துவங்கப்பட்ட ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் தான் இந்த வோல்டாஸ்.
வொயிட் குட்ஸ் உற்பத்தி நிறுவனங்களிலேயே வோல்டாஸ் நிறுவனம் தான் அதிகளவில் சீன உற்பத்தி சந்தையை நம்பி இயங்குகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் குறைவான விலையில் அனைத்து ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களை விற்பனை செய்யச் சீனா உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டணி சேர திட்டமிட்டுள்ளது.
வோல்டாஸ் நிறுவனத்தின் வர்த்தகம் 3 வருடத்திற்கு முன்பு சுமார் 93 முதல் 94 சதவீதம் வரையில் இறக்குமதி பொருட்களை நம்பி தான் இருந்தது தற்போது இதன் அளவு 70 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க முதலீடு செய்து வரும் வோல்டாஸ் அடுத்த 4 முதல் 5 வருடத்தில் இறக்குமதி பொருட்கள் அளவை 50 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
கேப்லின் பாயின்ட் லேப்ஸ்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பார்மா நிறுவனமான கேப்லின் பாயின்ட் லேப்ஸ் சீனாவில் ஒரு தனித் தொழிற்சாலையை வைத்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் வாங்குவது முதல் உற்பத்தி, பேகேஜ் வரை சீனாவில் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
சீனாவில் கேப்லின் பாயின்ட் லேப்ஸ் Hainan Jointown Caplin Point Pharmaceuticals என்ற நிறுவனத்துடன் கூட்டணி நிறுவனத்தை வைத்துள்ளது. இந்த நிறுவனம் சீனா, இந்தியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தேவையான மருந்து பொருட்களைத் தயாரித்து வருகிறது.
கிங்பா சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி
இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் இதர பைபர் பொருட்களை விற்பனை செய்யும் கிங்பா சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கிங்பா சீனா வைத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாகமும் சீனா உடையது.
ஸ்டார்ட்அப்
இவை அனைத்தையும் தாண்டி இந்திய ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் சேவை சந்தையை ஆட்சி செய்யும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீன முதலீடுகளின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சீனா தனது முதலீட்டை வெளியேற்றினால் பல ஆரம்பக்கட்ட நிறுவனங்கள் திவால் ஆகிவிடும், அந்த அளவிற்கு இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சீனா ஆதிக்கம் செய்கிறது.