சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்றும் எதிர்பாராத வகையில் 79.32 ரூபாய் வரையில் சரிந்தது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் விலைவாசி மட்டும் தான் உயரும் என்று நினைப்பவருக்கு இந்தியாவில் வெடிக்க இருக்கும் டைம் பாம் பற்றிக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மலைபோல் கடன்
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்கனவே ஜூன் மாதம் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளோம். இந்நிலையில் இந்தியா அடுத்த சில மாதத்தில் செலுத்த வேண்டிய கடன் தொகை மலைபோல் நிற்கிறது, இது நாட்டின் அன்னிய செலாவணியைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுக் கடன்
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 621 பில்லியன் டாலரில், அடுத்த 9 மாதத்தில் வெளி சந்தையில் வாங்கிய சிறிய காலக் கடனுக்கான தவணை மட்டும் சுமார் 267 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. இது நாட்டின் மொத்த அன்னிய செலாவணி இருப்பில் கிட்டதட்ட 44 சதவீதமாகும்.
முதலீடுகள் சரிவு
இதே நேரத்தில் பணவீக்கம், பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாகப் பல முன்னணி கார்பரேட் நிறுவனங்கள், வென்சர் பண்ட் நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வதைக் குறைத்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இதேவேளையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை காப்பாற்ற அதிகளவில் வெளியேற்றியும் வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
9 மாதங்கள்
மேலும் இந்திய ரூபாய் மதிப்பை பாதிக்கும் வகையில் கச்சா எண்ணெய், தங்கம், எலக்ட்ரானிக்ஸ், உற்பத்தி பொருட்கள் எனப் பல உள்ளது. அதற்கு அனைத்திற்கும் டாலர் இருப்பு தேவை என்பதால், இதே சூழ்நிலை அடுத்த 9 மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பில் பெரும் ஓட்டை விழக்கூடும்.
பொருளாதார வீழ்ச்சி
அப்போது பொருளாதார வீழ்ச்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. இது அடுத்த 2 வருடத்திற்குத் தொடர்ந்தால் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் தள்ளப்படலாம். ஆனால் இந்திய சந்தையைக் காப்பாற்றும் வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்த காத்திருக்கிறது.
நிர்மலா சீதாராமன்
இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு வர மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்யப்போகிறார் என்பது தான் தற்போது முக்கியக் கேள்வி. மோடி அரசு முன்னாள் அரசு போல் இந்தப் பொருளாதார மந்த நிலையைச் சமாளிப்பதில் பெரும் சவாலான காரியம். 2008 நிதிநெருக்கியில் அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மறந்துவிட முடியாது.
உலக நாடுகள்
பிரிட்டன் நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது, அமெரிக்காவில் பணவீக்கம் தாண்டவமாடுகிறது, சீனாவில் கொரோனா தொற்று குறைந்தபாடு இல்லை, ரஷ்யா சொல்லவே வேண்டாம்.. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாள் விளிம்பில் உள்ளது.
மீண்டும் 2008 நிதிநெருக்கடி சம்பவமா..?
இப்படி இருக்கும் சூழ்நிலையில் உலகளவில் இருக்கும் பொருளாதார வல்லுனர்கள் 2008 போல் சர்வதேச நிதிநெருக்கடி வரும் எனக் கணித்துள்ளனர். இதேபோல் இன்னும் சில மாதங்கள் பொருளாதார மந்த நிலை தொடர்ந்தாலே 2008 ஆம் ஆண்டு நிலை உருவாகும் என எச்சரிக்கின்றனர்.