இந்தியா எதிர்திசையில் செல்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அளவுகடந்த அதிகாரம்..!
நம் வரலாற்றைச் சார்ந்த காரணங்களால், மத்திய அரசாங்கத்துடன் நேரடி வரிவிதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் குவியும்படியும், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களைப் பிரித்து வழங்கிடவும் நம் மதிப்புமிக்க அரசியலமைப்பு வழிவகுத்தது. இது இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானது.
ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும் மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளது.
மேலும், சில நாடுகளில் இவை மாவட்டங்களுக்கும் மாநகரங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நம் அரசியலமைப்பு, அதன் 70 ஆண்டுகாலத்தில், பல திருத்தங்களை மேற்கொண்டதால், ஒரு வளர்ந்து வரும் ஆவணமாக நிரூபிக்கப்பட்டது.
ஆயினும்கூட, உலக அளவில் அதிகரித்துவரும் அதிகாரப் பகிர்வின் அனுபவத்திலிருந்து வேறுபட்ட நிலையில், இந்தியா எதிர்திசையில் சென்றுள்ளது. அதாவது, மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்தது.
உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நம் அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி முதல் மிகவும் இணக்கமான தேசியப் பொருளாதாரம் வரை, சரக்கு மற்றும் சேவை வரியின் வாக்குறுதிகள் பன்மடங்கு இருந்தது. ஆனால் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
15வது நிதிக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, வரியின் மிதப்புநிலையில் ஏற்படும் பலன்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களுக்கு ஊக்கமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் நடைப்பெறவில்லை.
அவ்வாறிருப்பின், தொழில்நுட்ப தலங்களுக்கு மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளுக்கு சமமற்ற அணுகல் காரணமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.
மறுபுறம், சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பில், நிதி ஆதாரங்களின் இழப்பு மற்றும் மாநிலங்களுக்கான தனிப்பட்ட நெகிழ்வுத்தன்மை ஆகிய முக்கியமான அபாயங்கள், தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிய வந்தது. இத்தகைய கடுமையான கவலைகள் இருந்தபோதிலும், பல மாநிலங்கள் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தினர்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலம் இருந்த பொழுது, மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக்காகவும் உறுதியாகப் போராடியது போல், பாரதப் பிரதமராகவும் அவ்வாறே தொடர்ந்து செயல்படுவார் என்பது தான் அந்த நம்பிக்கையின் முதன்மையான காரணம் என தமிழநாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசியுள்ளார்.