டெல்லி: நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் இந்திய பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற கவலை ஒரு புறம் இருந்து வந்தாலும், மறுபுறம் பொருளாதார வளர்ச்சி குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) சர்வதேச பொருளாதாரம் குறித்து ஒர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா அடுத்து வரும் ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானிய பொருளாதாரத்தை விஞ்சும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை விஞ்சும் இந்தியா
இது குறித்து வெளியான அறிக்கையில், 2019ம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக இருக்கும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தையே பின்னும் தள்ளி இந்தியா முந்தியுள்ளது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்துவது சற்று சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2026ம் ஆண்டில் ஜெர்மனியை முந்திக் கொண்டு 4 வது பெரிய பொருளாதாரமாகவும் முன்னேறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா ஜாப்பானையும் மிஞ்சும்
இதே 2034ல் ஜப்பானை முந்திக் கொண்டு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் முன்னேறும் என்றும் சிபிஇஆர் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2026ம் ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைய உள்ளது. இது அரசின் இலக்கை விட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் என்றும் கூறப்படுகிறது.
என்ன சொல்கிறது World Economic League Table 2020
World Economic League Table 2020' என்ற அறிக்கையில், 2019ம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளையும் பின்னுக்கு தள்ளி இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமான மாறியுள்ளது. இந்த நிலையில் இது 2026ம் ஆண்டில் ஜெர்மனியை முந்தும் என்றும், இதே 2034ல் ஜப்பானையும் முந்தும் என்றும் வேர்ல்டு எக்னாமிக் லீக் டேபிள் 2020 என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார இலக்கு
எனினும் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டாலும், அடுத்த 15 ஆண்டுகளில் ஜப்பான், ஜெர்மனி மற்றும் இந்தியா மூன்றாவது இடத்திற்காக போராடும் என்றும் சிபிஇஆர் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2024ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் இலக்கு 5 டிரில்லியன் டாலர் அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இலக்கினை அடைய 2 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த ஏற்றம் என்பது கவனிக்கதக்கது.
அரசின் இலக்கு எளிதல்ல
எனினும் அரசின் இந்த இலக்கினை எட்டுவது அவ்வளவு எளிதல்ல சற்று கடினமான விஷயமாகவே கருதப்படுகிறது. சமீபத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சி ரங்கராஜன் தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் 2024 - 2025ல் 5 டிரில்லியன் அமெரிக்கா டாலர் இலக்கினை அடைவது கேள்விக் குறியாக உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் பாராட்டப்பட்டு வந்தாலும், நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதமானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதலீட்டில் நிலவி வரும் மந்த நிலை, தேவை குறைவு, கிராமப்புறங்களிடையே நிலவி வரும் நிதி அழுத்தம், பலவீனமான வேலைவாய்ப்புகள் என பல முக்கிய காரணங்கள் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின.
மற்ற நாடுகளின் முன்னேற்றம்
இந்த அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீட்டிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த அறிக்கையில். எரிபொருட்கள் சந்தையிலிருந்து விலகிச் செல்லும்போது, உலகளவில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி அரேபியா மாறலாம் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2034க்குள் கனடா உலகின் எட்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்றும், ஆஸ்திரேலியா ஒரு இடம் முன்னேறி 13வது இடத்திற்கு வரும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலவீனமான நாடுகள்
பெரும்பாலான வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்கள் நாம் கணித்ததை விட பலவீனமான பணமதிப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்தியா விஞ்சும், இதே சீனா, அமெரிக்காவை விஞ்சலாம், பிரேசில், இத்தாலியை விஞ்சலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேட்பதற்கு என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. இந்த கனவு நிஜமானால் சரிதான்..