கொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..!
கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவில், வரும் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்போதும் கூட கொரோனாவின் இரண்டாவது அலையோடு போராடி வரும் இந்திய மக்களை காப்பாற்ற, முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுவது தடுப்பூசியே.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெருந்தொற்றானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் பொருளாதாரம், வாழ்வாதரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையில் பலரும் வேலையிழந்து தவித்தும் வருகின்றனர். இந்த இழப்புகளை விட ஈடே செய்ய முடியாத அன்பானவர்களை பலரும் இழந்துள்ளனர்.
செலவு அதிகரிப்பு
இப்படி ஒரு நிலையில் தான், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே வருவாயினை இழந்து, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் அரசானது, மேற்கொண்டு கொரோனா தடுப்பூசிக்கான செலவினமும் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி செலவு
நடப்பு நிதியாண்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி செலவினங்களுக்காக அரசு 45,000 கோடி ரூபாய் வரை (6.185 பில்லியன் டாலர் வரை) அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரதமர் மோடியின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு பின்னர் இந்த கணிப்புகள் வந்துள்ளது.
அரசுக்கு மொத்த செலவு
இது குறித்து வெளியான செய்தியறிக்கையில், பிரதமர் மோடி அரசு கடந்த திங்கட்கிழமையன்று நாடு முழுவதும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி என அறிவித்துள்ளது. இது ஜூன் 21 முதல் செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிய இந்த நிதியாண்டில், கொரோனா தடுப்பூசிகளுக்காக அரசு 45,000 கோடி ரூபாய் வரை செலவழிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முன்னதாக 35,000 கோடி ரூபாயாக கூறப்பட்டது.
என்னென்ன தடுப்பூசிகள்
தற்போது நாட்டில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கபப்ட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றது. மற்றொன்று பாரத் பயோடெக்கின் தடுப்பூசியாகும். ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வணிக ரீதியாக இந்த மாத நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
தடுப்பூசி பற்றிய பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போது இதற்கான செலவினை மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. முன்னதாக மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுகளுக்கு ஒரு விலை என தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.