சீனா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300க்கும் அதிகமான பொருட்கள் மீது அதிகளவிலான வர்த்தகத் தடைகளையும், வரி உயர்வையும் அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் இந்திய வர்த்தகமும், இந்திய உற்பத்தியாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிகளவில் பலன் அடைவார்கள் என அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும், சமீபத்தில் மோடி, கொரோனாவால் பாதித்துள்ள நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் வர்த்தகத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
மேலும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு முறை அடுத்த 3 மாதத்திற்குள் முழுமையாக அமலாக்கம் செய்யப்பட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
300 பொருட்கள்
இந்திய நிதி அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும் நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் படி முதல் கட்டமாக 160 முதல் 200 இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிப்பு, இதர 100 பொருட்கள் மீது வரி அல்லாமல் தரத்தின் சோதனை அடிப்படையில் வர்த்தகத் தடையை விதிக்க முடிவு செய்துள்ளது.
8-10 பில்லியன் டாலர்
தற்போது விதிக்கப்படும் வர்த்தகத் தடை அனைத்தும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைவான பொருட்கள் மீது தான் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு மூலம் 8 முதல் 10 பில்லியன் டாலர் வரையில் இறக்குமதி வர்த்தகம் பாதிக்கும் எனத் தெரிகிறது
சீனா மற்றும் இதர நாடுகளில் இருந்து வரும் தரங்கெட்ட பொருட்களின் வருகை மூலம் இந்திய தயாரிப்புகளுக்கு மதிப்பும், விலையும் இல்லாமல் போகிறது என அரசு அதிகாரிகள் கூறினர்.
வர்த்தகப் பற்றாக்குறை
மேலும் தற்போது விதிக்கப்படும் வரி விதிப்பு எந்த நாட்டையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்துச் செய்யப்படவில்லை என்றும், வர்த்தகப் பற்றாக்குறையைத் தீர்க்கும் நோக்கத்தோடு இது செய்யப்படுகிறது என அந்தப் பெயர் வெளியிடப்படாத அரசு அதிகாரி தெரிவித்தார்.
இந்தியா Vs சீனா
மார்ச் 2019 வரையிலான நிதியாண்டில் இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 88 பில்லியன் டாலர். இதில் வர்த்தகப் பற்றாக்குறையின் மதிப்பு 53.5 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கருத்தில் கொண்டு தான் தற்போது மத்திய அரசு இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதேபோல் ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலான காலத்தில் இந்தியா சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 46.8 பில்லியன் டாலர்.