டெல்லி: வழக்கமாக இந்த காலத்தில் மக்கள் புத்தாண்டையும், கிறிஸ்துமஸ்-சையும் கொண்டாட விலை மலிவான அலங்கார லைட்ஸ் மற்றும் மலிவான பொம்மைகளும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நேரம் இது. ஆனால் நடப்பு ஆண்டில் பொம்மை இறக்குமதி, லைட்ஸை விடுங்க பாஸ். மத்திய அரசு சீனாவிலிருந்து வெங்காயத்தை மலிவு விலையில் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது உள்நாட்டு சந்தைகளில் வெங்காயம் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 200 ரூபாயை கூட தொட்டது. இந்த நிலையில் ஓரளவு இறக்குமதியால் விலை சற்று குறைய ஆரம்பித்துள்ளது.
எனினும் புது வருடம் மற்றும் கிறிஸ்துமஸ் நேரத்தில் வெங்காயத்தின் தேவை அதிகம் இருப்பதால் விலை இன்னும் கூட வாய்ப்புள்ளது. இதனால் இதனை மனதில் வைத்துக் கொண்டே மத்திய அரசு வெங்காயத்தை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
எனினும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 2020, ஜனவரி 31ம் தேதிக்குள் வெங்காயம் இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வெங்காயத்தின் விலை இந்தியாவில் 70 -80 ரூபாய்க்குள் இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நெதர்லாந்து, எகிப்து, ஈரான், துருக்கி, மற்றும் ரஷ்யாவில் இருந்து காய்கறிகளையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் முதன்மையான உலோகங்கள் மற்றும் தாதுக்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் எம்.எம்.டிசி உற்பத்தியில் தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் நிலையில், வெங்காயம் இறக்குமதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. அதுவும் வெங்காயத்தின் விலையானது 120 ரூபாய்க்கும் மேல் சென்ற போது வெங்காயத்தை வாங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முக்கியமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் இரு மாநிலங்களான மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில், பெய்த அதிகப்படியான மழை காரணமாக வெங்காயம் உற்பத்தி வெகுவாக குறைந்தது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு வரத்தும் குறைந்தது. இதனால் வெங்காயத்தின் விலையானது வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டது. இந்த நிலையில் தான் அரசு எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்தது.
ஆனாலும் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு நீடித்து வருவதால், அரசு சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் நினைகிறது போலும்.