ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறதா இல்லையா என சில அடிப்படைத் தரவுகளைப் பார்த்தே சொல்லிவிடலாம்.
அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த மின்சாரம். ஒரு நாட்டில் மின்சார தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று பொருள்.
அதிலும் குறிப்பாக வணிக ரீதியிலான மின்சாரத் தேவை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பொருளாதாரம் வளர்கிறது என்பார்கள். வீடுகளுக்கான மின்சாரத் தேவை அதிகரிக்கிறது என்றால், அது நுகர்வு அதிகரிக்கிறது என பொருள் கொள்ளலாம்.
கொரோனா
ஆனால் இப்போது கதையே வேறு. இந்தியாவில் இந்த கொடூரமான கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, 21 நாட்களுக்கு ஷட் டவுன் செய்து இருக்கிறது மத்திய அரசு. இதனால் இந்தியாவில் மின்சாரத் தேவை கணிசமாகக் குறைந்து இருக்கிறதாம். எவ்வளவு குறைந்து இருக்கிறது என்கிற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
மின்சார தேவை
சுமாராக, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு, இந்த மார்ச் 25, 2020 புதன் கிழமை அன்று, ஷட் டவுனின் முதல் நாளில் இந்தியாவின் மின்சாரத் தேவை குறைந்து இருக்கிறதாம். யாராவது, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்றவைகளில் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் தானே மின்சாரத் தேவை அதிகரிக்கும். நாடே ஷட் டவுன் ஆனால் மின்சார தேவை சரியாதா என்ன..?
எவ்வளவு யூனிட்கள்
இந்த, மார்ச் 2020 மாதத்தின் முதல் 3 வாரங்களில், இந்தியா முழுக்க, சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமாராக 3.45 பில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டதாம். ஆனால் ஷட் டவுனின் முதல் நாளிலேயே 2.78 பில்லியன் யூனிட் மின்சாரம் தான் தேவை ஏற்பட்டு இருக்கிறதாம்.
20 % தேவை சரிவு
ஆக கடந்த மார்ச் 25, 2020 அன்று ஒரே நாளில், இந்தியாவின் மின்சார தேவை சுமாராக 20 சதவிகிதம் சரிந்து இருக்கிறது என்றால், பொருளாதாரம் எந்த அளவுக்கு அடி வாங்க் இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியா முழுக்க மின்சார தேவை சரிந்து இருக்கிறதா என்றால் இல்லை.
மாநிலங்கள்
சில மாநிலங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மின்சார தேவை இருந்து இருக்கிறது. உதாரணமாக உத்திரப் பிரதேசத்தில் மார்ச் 25 அன்று, மார்ச் மாதத்தின் முதல் 3 வார சராசரியை விட 3.4 % கூடுதலாக மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம். ஒடிஸா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் மின்சாரம் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டு இருக்கிறதாம்.