நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழாமல் இல்லை.
இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.
இன்று காலையில் தொடக்கத்தில் 75.75 ரூபாயாக தொடங்கிய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 75.81 வரை சென்று வீழ்ச்சி கண்டு தற்போது 75.71 ஆக உள்ளது.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
கொரோனாவின் பயத்தினால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பய உணர்வே நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் இருந்தும், கடன் சந்தைகளில் இருந்தும் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருக்கின்றன. அதோடு இந்தியா மட்டும் அல்லாது பலவேறு உலக நாடுகளிலும் கொரோனாவின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
அமெரிக்க - சீன பிரச்சனை
இதுவும் ரூபாயின் மதிப்பு சரிய ஒரு காரணமாக அமைந்துள்ளது. இது தான் இப்படி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மீண்டும் தற்போது பிரச்சனை உருவாக ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் சரி, வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் சரி, கொரோனாவினை பரப்பியது சீனா தான் என கூறி வருகின்றனர். ஏன் இன்னும் ஒரு படி மேலே பேய் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
புதிய கட்டணம் உண்டு
மேலும் இதற்காக சீனாவுக்காக புதிய கட்டணங்களை விதிக்கப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரூபாயின் சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் ஆசிய நாடுகளில் இந்தியா உள்பட பல நாடுகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி விகிதம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மார்ச் மாதத்திலேயே 27.4% ஆக குறைந்தது.
சென்செக்ஸ் வீழ்ச்சி
இதற்கிடையில் இன்று சென்செக்ஸ் 1950 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,767 ஆக உள்ளது. அதாவது சுமார் 6% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி கிட்டதட்ட 6% வீழ்ச்சி கண்டு (அ) 554 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,305 ஆகவும் உள்ளது. இதுவும் ரூபாயின் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது.
இதுவும் ஒரு காரணம்
இது மட்டும் அல்ல, இந்தியாவில் தற்போது சிவப்பு, பச்சை ஆரஞ்ச் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றில் சிவப்பு தவிர மற்றா பிரிவுகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய தலை நகரங்களான, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் தளர்வுகள் இல்லை. அதோடு சிறு தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இப்படி உலகமே லாக்டவுனால் முடக்கப்பட்டுள்ள நிலையில் அது ரூபாயின் மதிப்பு சரிவுக்கு மேலும் அழுத்ததினை கொடுத்துள்ளது.