இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் சேவைகள் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அடுத்த 5 வருடத்தில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற முக்கியமான ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது என்றால் மிகையில்லை.
ஈகாமர்ஸ் துறையும் கொரோனாவும்
ஈகாமர்ஸ் சந்தைக்குக் கொரோனா தொற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளும் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை அளித்துள்ளது. இது பிற நாடுகளைவிடவும் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் கொரோனா காலத்தில் புதிதாகப் பல கோடி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திற்குள் வந்துள்ளது.
சிறு நகரங்கள்
குறிப்பாகப் பெரு நகரங்களை விடவும் சிறு நகரங்கள், டவுன் பகுதிகளில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திற்குள் வந்துள்ளனர். இதனால் அடுத்த சில வருடங்களுக்குச் சிறு நகரங்களை அடைவது தான் முக்கிய இலக்காக ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு மாறியுள்ளது.
99 பில்லியன் டாலர் வரை உயரும்
இந்திய ஈகாமர்ஸ் துறை எப்போதை விடவும் கடந்த 2 வருடத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 2024ஆம் ஆண்டுக்குள் இத்துறையின் வர்த்தகம் 99 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. கிட்டதட்ட 100 பில்லியன் டாலர் அளவிற்கு நிகரானது.
வருடம் 27% வளர்ச்சி
இதுமட்டும் அல்லாமல் அடுத்த 4 வருடத்தில் இத்துறை சராசரியாக வருடம் சுமார் 27 சதவீதம் வளர்ச்சி அடையும் என EY-IVCA Trend Book 2021அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு வருடமும் EY நிறுவனம் ஒரு துறையில் வளர்ச்சி கணிப்புகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிடும்.
மளிகை, பேஷன், ஆடை பொருட்கள்
இந்த அதிரடி வளர்ச்சிக்கு அடித்தளமாக மளிகை பொருட்கள், பேஷன், ஆடை பொருட்கள் தான் அடித்தளமாக இருக்கப்போகிறது எனவும் இந்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது. இதன் மூலம் ரீடைல் மற்றும் சாதாரணக் கடைகள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் கூற முடியும்.
220 மில்லியன் வாடிக்கையாளர்கள்
இதேவேளையில் 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய ஈகாமர்ஸ் துறையில் சுமார் 220 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். இதுமட்டும் அல்லாமல் இந்திய ரீடைல் சந்தையில் 2019ஆம் ஆண்டு ஈகாமர்ஸ் துறை 4.7 சதவீதம் மட்டுமே தனது வர்த்தக்தை வைத்திருந்த நிலையில், 2024ல் இதன் அளவு 10.7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
400 முதலீடுகள்
2020ல் மட்டும் இந்திய ஈகாமர்ஸ் மற்றும் கன்ஸ்யூமர் இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் சுமார் 8 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை 400 வர்த்தக ஒப்பந்தம் மூலம் PE மற்றும் VC முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் வளர்ச்சியைக் கணித்துவிடலாம்.