மும்பை: கொரோனா ரணகளத்தினால் முடங்கிபோயுள்ள வணிகங்கள், உற்பத்தி நிறுத்தம், முடங்கி போன பொருளாதாரம், இவற்றிற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இப்படி மக்களை பாடாய் படுத்தி எடுத்து வரும் நிலையில், ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனில் அது அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரிப்பு தான்.
இந்த ரணகளத்திலும் மக்கள் ஒரு நல்ல விஷயத்தினை கண்டுள்ளனர் எனில் அது இது தான். இந்த அந்நிய செலாவணி கையிருப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இது விரைவில் 500 பில்லியன் டாலர்களை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 12.4 பில்லியன் டாலர் அதிகரித்து, மே 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 493.48 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 37.30 லட்சம் கோடி ரூபாயாகும். இந்த அந்நிய செலாவணி கையிருப்புகளின் அளவு மார்ச் 1991 நிலவரத்துடன் ஒப்பிடும்போது, தற்போது 8,400 சதவீதம் அதிகரித்துள்ளது.
சரி இந்த கொரோனா ரணகளத்திலும் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறதே அதற்கு என்ன காரணம்? கொரோனா வைரஸின் பிடியிலும் கூட, அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளரகளின் முதலீடு, அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பு, அதிகளவிலான வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வாங்கியுள்ளது, இப்படி பல காரணங்கள் உண்டு.
கடந்த மார்ச் மாதத்தில் கடன் மற்றும் பங்கு பிரிவுகளில் இருந்து தலா 60,000 கோடி ரூபாய் நிதி வெளியேறிய நிலையில், நடப்பு நிதியாண்டில் அவை மீண்டும் திரும்பி வரத் தொடங்கியுள்ளன. கடந்த வாரத்தில் கூட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோவில் மொத்தம் 97,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. .
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் சரிந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் மற்றும் வெளி நாட்டு பயணங்கள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன. இது ஏப்ரல் மாதத்தில் 61 சதவீதம் வீழ்ச்சி கண்டு 12.87 பில்லியன் டாலராக இருந்தது. அதோடு மே மற்றும் ஜூன் மாதங்களில் டாலர் வெளியேற்றத்தில் மேலும் சரிவைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.