இந்திய பொருளாதாரத்தின் கிரீடம் என்றால் அது நிச்சயம் நுகர்வோர் சந்தை தான். கொரோனா தாக்கத்தால் மக்கள் வேலை வாய்ப்புகளை இழப்பு, வருமானம் இல்லாமல் மக்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே போதுமான பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாகப் பொருளாதாரப் படிகளில் கீழ்த்தட்டு மக்கள் கடுமையான நிதி பற்றாக்குறையிலும், நடுத்தர மக்கள் தங்களது மொத்த சேமிப்பையும் இந்த இக்காட்டான காலத்தில் செலவு செய்தும் வருகின்றனர்.
பருவமழை பாதிக்கும் போது விவசாய உற்பத்தி பாதிப்பதைப் போல், பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட போது சிறுகுறு வர்த்தகங்கள் மற்றும் அதனைச் சார்ந்து உள்ள ஊழியர்கள் பாதிப்பு அடைந்ததைப் போல் தற்போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் பொருளாதார மந்த நிலையில் இந்திய நுகர்வோர் சந்தை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தப் போவது உறுதி எனத் தெரிகிறது.
பொதுவாக வேலை வாய்ப்பு இழப்புகள் நுகர்வோர் சந்தையைப் பெரிய அளவில் பாதிக்காது ஆனால் தற்போது மிக மோசமான எதிர்வினைகளைச் சந்திக்க உள்ளது.
இந்திய மக்கள்
நம் நாட்டு மக்களைப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் செலவு செய்யும் அளவீடுகளை வைத்து 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1 ஏழை மக்கள் 2. நடுத்தர மக்கள் 3. மேல் தட்டு மக்கள். இந்திய மக்களைத் தொகை பொருத்த வரையில் 40 சதவீதம் ஏழை மக்கள், 40 சதவீதம் நடுத்தர மக்கள் மீதமுள்ள 20 சதவீத மக்கள் மேல் தட்டு மக்கள்.
இதேபோல் ஊரகப் பகுதிகளில் நுகர்வோர் சந்தை சுமார் 57 சதவீதம் இருக்கிறது, நகரப் பகுதிகளில் இது 43 சதவீதமாக இருக்கிறது.
ஊரகப் பகுதி
பொதுவாக ஊரகப் பகுதி மக்களின் பொரும்பாலன வருமானம் விவசாயம், casual jobs பிரிவில் இருக்கும் வகைப்படுத்தா துறை சார்ந்த வேலைவாய்ப்பு மற்றும் சிறு, குறு, குடிசை தொழில் சார்ந்து தான் இருக்கும்.
இப்படியிருக்கையில் இந்தப் பருவமழை சிறப்பாக இருந்து விவசாய உற்பத்தி சிறப்பாக இருந்தால் நிச்சயம் ஊரகப் பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் சந்தை குறைந்த காலகட்டத்தில் 30 சதவீதம் மீண்டு வந்துவிடும். ஆனால் அதுவே விவசாய உற்பத்தி பொயத்துவிட்டால் 57 சதவீத நுகர்வோர் சந்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பொருளாதாரப் பாதிப்பைச் சந்திக்க நேரிடம்.
நகரப் பகுதிகள்
நகரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளை நம்பியிருக்கும் ஊழியர்களும், அதிக மாத சம்பளம் பெறுபவர்களாகத் தான் உள்ளனர். இவர்களைச் சார்ந்து தான் 43 சதவீத நுகர்வோர் சந்தை இயங்குகிறது.
இப்படியிருக்கையில் கொரோனா பாதிப்பின் காரணமாகத் தற்போது பெரும்பாலான ஊழியர்களின் வேலைவாய்ப்புகள் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளது. இதனால் இப்பரிவு மக்களின் அதிகமாகச் செலவு செய்யும் உணவு, பொழுதுபோக்கு, ஆடம்பர பிரிவு சார்ந்த அனைத்து வர்த்தகமும் பாதிப்பு அடைந்துள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு சந்தை சரியான பின்பு நகரப்புற பொருளாதாரம் வேகமாக மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 சதவீத மக்கள்
தற்போது எவ்விதமான பாதிப்பும் இல்லாத மக்கள் என்றால் அதிக வருமானம் பெறும் குடும்பம் மற்றும் தனிநபர்கள் தான். நகரப்புற நுகர்வோர் சந்தையில் சுமாப் 32 சதவீதம் இந்த 20 சதவீத உயர் தட்டு மக்கள் கையில் இருக்கிறது. இவர்கள் இருக்கும் காரணத்தாலும், வேலைவாய்ப்பு சந்தை மேம்படுவதாலும் நகரப்புற பொருளாதாரம் வேகமாக வளரும் என எதிர்பார்க்கிறது.
50 சதவீதம்
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சில பகுதிகளில் இதன் பாதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் எதிரொலியாகப் பாதிப்பு வாரியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வருகிறது மத்திய மாநில அரசுகள். இது வர்த்தகச் சந்தைக்குச் சாதகமாக இருந்தாலும் பாதிப்பு தொடர்ந்து குறைந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் தற்போது இருக்கும் அளவிட்டுத் தொடர்ந்தால் அடுத்த 6 மாத காலத்தில் இந்திய நுகர்வோர் சந்தை 50 சதவீதம் மீண்டு வந்தாலே மிகப்பெரிய விஷயமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.