எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, இந்தியாவின் ஏரல் மாதம் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயரும் என ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ஐந்து மாநில தேர்தல் சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருந்து எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து விலையை உயர்த்தின. மறுபக்கம் பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் அளவில் உயர்ந்தது. எனவே எதிர்பார்த்ததை போன்று இந்தியாவின் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு
உணவுப் பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டில் கிட்டத்தட்டப் பாதியாக அதிகரித்துள்ளது. காய்கறி மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால் மார்ச் மாதம் உச்சத்தை எட்டிய பணவீக்கம் அப்படியே தொடருகிறது.
சில்லறை பணவீக்கம் கருத்துக்கணிப்பு
இவை காரணமாக ஆசியாவின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவில் மார்ச் மாதம் 6.95 சதவீதமாக இருந்த பணவீக்கம், 7.5 சதவீதமாக அதிகரித்திருக்கும் என மே 5 முதல் 9-ம் தேதி வரையில் ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
எதிர்பார்ப்பு
இந்திய புள்ளியியல் துறை மே 12-ம் தேதி பணவீக்கம் குறித்த தரவை வெளியிடும் போது 7 முதல் 7.85 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்துவதற்கு ஒரு நாள் முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயத்தி 4.4 சதவீதமாக அறிவித்தது. தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. எனவே எண்ணெய் விலை கூடுதலாக அதிகரித்து மேலும் பணவீக்கம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்த விலை பணவீக்கம்
மொத்த விலை பணவீக்கம் 14.48 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே இது இரட்டை இலக்கில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.