உலகம் முழுவதும் பாதித்துள்ள கொரோனாவிற்குத் தீர்வு காண அரசு மட்டுமில்லை பல்வேறு தனியார் நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தியாவில் முன்னணி முதலீட்டு நிறுவனங்களும், முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்களும் ஒரு முக்கியமான திட்டத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்தத் திடீர் திட்டத்திற்காகச் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டியுள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
முன்ணணி முதலீட்டு நிறுவனங்கள்
சிகோயா இந்தியா, மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், SAIF பார்ட்னர்ஸ், லைட்ஸ்பீட் வென்சர்ஸ், கலாரி கேப்பிடல், சிராட்டே வென்சர்ஸ், ஒம்டியார் நெட்வொர்க் மற்றும் நெக்சஸ் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனங்களுடன் நாட்டின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்கள் இணைந்து சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டியுள்ளனர்.
எதற்காக..?
கொரோனாவை அழிக்கவும், அதை எதிர்த்து போராடும் வழிகளை உருவாக்கும் பொருட்டு இது தொடர்புடைய ஐடியாக்களுக்கு நிதியுதவி செய்யும் முயற்சியில் இந்த 100 கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டப்பட்டுள்ளது.
முக்கிய ஐடியா தேவை
தற்போது திட்டமிட்டுள்ளபடி கீழே உள்ள 6 முக்கியமான தேவைகள் அடிப்படையில் ஐடியாக்கு நிதியுதவி செய்ய இக்குழு முடிவு செய்துள்ளது.
1. கொரோனா பரவுவதைத் தடுக்கும் வழிகள்
2. சோதனை செய்யும் முறைகள்
3. வீட்டில் தொற்று மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை
4. சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், மருத்துவமனைக்கும் உதவி திட்டங்கள்
5. நோய் தொற்று உள்ளவர்களை எப்படி நிர்வகிப்பது
6. நோயாளி மற்றும் அவரது குடும்பத்தின் மனநிலயை கையாளும் முறை
நிதியுதவி
முதலில் சரியான ஐடியாக்களைத் தேர்வு செய்து 10 லட்சம் ரூபாய்க் கொடுக்கப்படும், அந்த ஐடியாவை சந்தைப்படுத்த முடியும் அல்லது அதை மக்கள் மத்தியில் வர்த்தகம் செய்ய முடியும் என்றால் இரண்டு மடங்கு தொகைகளாக முதலீடு செய்யப்படும்.
இப்படி ஒரு திட்டத்திற்கு அதிகப்படியாக 10 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஐடியா
இதுவரை 40 ஐடியாக்களுக்குச் சுமார் 2.5 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஐவிஆர் பிராஜெக்ட், மைலேப் மற்றும் வென்டிலேட்டர் ஸ்பிலிட்டர் ஆகிய திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அடுத்த 2 மாதத்தில் 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை முழுவதும் ஒதுக்கப்படும் என்றும், ஐடியா மற்றும் மாதிரியை சுகாதாரத் துறை நிபுணர்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்பே சந்தைப்படுத்தப்படும் என இக்குழு தெரிவித்துள்ளது.