இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக முறையாகத் திட்டமிடாமல் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த பின்பும், பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு செய்த பின்பும் நாட்டின் வகைப்படுத்தாத வர்த்தகத் துறை முற்றிலுமாக நிலைகுலைந்து.
இதன் எதிரொலியாக நாட்டின் வேலையில்லா திண்டாடத்தின் அளவு 9 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதன் பின்பு கடந்த 2 வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்த காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் அல்லாமல் வேலைவாய்ப்பு சந்தை மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.
இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்குத் தற்போது வேலையில்லா திண்டாட்டம் 26 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ஊரடங்கு அமலாக்கம் செய்யப்பட்டது. இக்காலகட்டத்தில் நாட்டின் அனைத்து வர்த்தகமும் முடங்கி மக்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
மார்ச் 3வது வாரம் வரை இந்தியாவில் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் 6.7 சதவீதம் வரையில் இருந்த நிலையில் ஊரடகங்கு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே வேலைவாய்ப்பின்மை ரூத்ர தாண்டவம் ஆட துவங்கியது.
வேலையில்லா திண்டாட்டம்
மார்ச் மாத்தின் 3வது வாரத்தில் 8.4 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், 4வது வாரத்தில் 23.4 சதவீதம் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன் பின்பு ஏப்ரல் முதல் வாரத்தில் 23.8 சதவீதம், 2வது வாரத்தில் 24 சதவீதம் என உயர்ந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 3வது வாரத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் வேலையில்லா திண்டாட்டம் 26.2 சதவீதம் வரையில் உயர்ந்து நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு சந்தையும் சீர்குலைத்துள்ளது.
14 கோடி ஊழியர்கள்
பிப்ரவரி மாதம் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் 40 சதவீதமாக இருந்தது, ஆனால் இப்போது கொரோனா பாதிப்பின் காரணமாக 26 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிட்டதட்ட 14 சதவீத சரிவு, இது இந்தியாவில் working age மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதையே விளக்குகிறது.
இந்த 14 சதவீத சரிவின் மூலம் இந்தியாவில் கடந்த 14 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதையும் படம் போட்டுக் காட்டுகிறது.
இந்தியா முழுவதும்
இந்த வேலைவாய்ப்புப் பாதிப்பு நகரங்களில் மட்டும் அல்லாமல் ஊரகப் பகுதிகளிலும் இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்திய பொருளாதாரம் கிட்டத்தட்ட 8 முதல் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.