இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை எப்போதும் இறக்குமதி தான் செய்யும், ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா உட்படப் பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உபகரணங்கள் மற்றும் ஆயுத ஏற்றுமதியின் அளவு 334 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வர்த்தகத் துறை, வாய்ப்புகள், வருமானம் உருவாகியுள்ளது. விரைவில் இந்தியாவின் முக்கியமான வர்த்தகப் பிரிவாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இந்தியா எத்தனை நாடுகளுக்குப் பாதுகாப்புத் துறை உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது தெரியுமா..?
இந்தியா
இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு முடிவு செய்து பல முக்கியத் திட்டங்களைத் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை
இதன் வாயிலாக இந்திய பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி 334 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தத் தடாலடி வளர்ச்சி கூட்டு முயற்சிகள் வாயிலாக மட்டுமே சாத்தியமானது. இந்தியா தற்போது 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
334 சதவீத வளர்ச்சி
கடந்த ஐந்தாண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதி 334 சதவிகிதம் அதிகரித்துள்ளது; கூட்டு முயற்சிகளால் இந்தியா இப்போது 75 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்கிறது என்று PIB ட்வீட் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தியை உயர்த்தி உள்ளது.
உள்நாட்டுத் தயாரிப்புகள்
இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் சமீபத்தில் கொச்சியில் இயக்கப்பட்டது மறக்க முடியாத நிகழ்வு, இந்தியக் கடலோரக் காவல்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் Mk-III, புதிய தலைமுறை அணுசக்தித் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையான 'அக்னி பி'யின் வெற்றிகரமான சோதனை ஆகியவை முக்கியமானதாகும்.
இந்திய பாதுகாப்பு செயலாளர்
இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் பாதுகாப்புத் துறையில் ஒட்டுமொத்தமாக மேக்-இன்-இந்தியா முயற்சிகளின் முழுமையான ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மோடியின் Amrit Kaal-ன் முக்கியப் பகுதியாகப் பாதுகாப்பு உற்பத்தியில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.