இந்தியாவில் தொழில்நுட்பம், புதுமைகள், அறிவியல் என அனைத்தும் பல துறைகளிலும் புகுத்தி வருவதன் மூலமும், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்து கொண்டுள்ளதாலும், அடுத்த சில வருடங்களில் இந்தியா, உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறிய அறிக்கையில், கொரோனா தாக்கத்தில் இருந்து இன்னும் சில காலாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மீண்டு வந்துவிடும். இது வருடத்திற்கு சராசரியாக 7 - 8% அடுத்த 20 - 30 வருடங்களுக்கு இருக்கலாம்.
ஆக 2047ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்றும் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பல நடவடிக்கைகள்
அறிவியல் தொழில் நுட்பத் துறையின் ஐம்பது வருடங்களைக் கொண்டாடுவதற்காக, சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய ராஜீவ், உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா வலம் வர, இந்தியா பல சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
குறிப்பாக விவசாயம், நவீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், புதிய கல்விக் கொள்கை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜீவ் கூறியுள்ளார்.
ஜிடிபி எதிர்பார்ப்பு
மேலும் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22 நிதியாண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்குக்கு முந்தைய நிலையை எட்டும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம்
கொரோனா பலவற்றை மாற்றியுள்ளது. இது பல புதிய தொழில் நுட்பங்களை புகுத்தியுள்ளது. பல புதிய விஷயங்களை செய்வதற்கான வழிகளை காட்டியுள்ளது. இவற்றில் பலவும் கொரோனாவிற்கு பின்பும் இருக்கும். ஆக கொரோனாவுக்கு பின்பு, ஒரு புதிய பொருளாதார அமைப்பை நாம் பெறுவோம் என்றும் ராஜீவ் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு
நாட்டில் கொரோனாவ்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் திங்கட்கிழமையன்று நிலவரப்படி, 96,87,385 வழக்குகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கையும் 1,41,711 ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஆக்டிவ் வழக்குகள் குறைந்துள்ளது சற்றே ஆறுதல் தரும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது கொரோனா தடுப்பூசி விரைவில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், அது இன்னும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.