இந்தியாவில் ஆன்லைன் விற்பனை சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மொத்த விலை விற்பனையாளர்களுக்கெனப் பிரத்தியேகமாக விளங்கும் இந்தியாமார்ட் தளத்தில் கோவர்த்தன மலையின் கற்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாமார்ட் சிஇஓ உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவர்த்தன மலை
மதுரா பகுதியில் இருக்கும் கோவர்த்தன மலை ஹிந்து மதத்தின் புனித தளமாகக் கருதப்படும், நிலையில் கடவுள் கிருஷ்ணர் தொடர்புடைய பல கதைகளில் இந்தக் கோவர்த்தன மலை குறிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பலர் கோவர்த்தன மலையில் கிருஷ்ணர் இன்னும் வாழ்ந்து வருவதாகப் பலர் நம்பும் நிலையில் இந்த மலையின் கற்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாமார்ட் தளம்
கோவர்த்தன மலை கற்கள் இந்தியாமார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தியாமார்ட் தளத்தின் சிஇஓ மற்றும் கற்களை விற்பனை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
3 பேர் மீது வழக்கு
இதைத் தொடர்ந்து இந்தியாமார்ட் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தினேஷ் அகர்வால், துணை நிறுவனரான ப்ராஜேஷ் அகர்வால், மதுரா பகுதியைச் சேர்ந்த விற்பனையாளரான அன்கூர் அகர்வால் ஆகியோர் மீது போலீஸார் ஐபிசி 265 பிரிவின் படியும், தகவல்தொழில்நுட்ப பிரிவு 66 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரா பகுதியை
மதுரா பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷ்வ் முக்தியா கோவர்த்தன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கிற்கான நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளதாக எஸ்பி சிரிஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியாமார்ட் விளம்பரம்
இந்தியாமார்ட் தளத்தில் உள்ள விளம்பரத்தின் படி ஒரு கல் 5,175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இது எவ்விதமான போலியானது அல்ல என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து சுமார் 10க்கும் மேற்பட்ட புகார்கள் கோவர்த்தன காவல் நிலையத்தில் இருக்கும் காரணத்தால் அனைத்தும் இணைத்து ஓரே வழக்காகக் கொண்டு போலீஸார் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.