இந்தியப் பொருளாதாரம், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஜனவரி 2020 - மார்ச் 2020 காலாண்டில் குறைந்த வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள். அதற்கு கொரோனா வைரஸ் லாக் டவுனைத் தான் முக்கிய காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியப் பொருளாதாரம், கடந்த ஆண்டில் இருந்தே மந்தமடையத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்த மார்ச் 2020-ல் தான், அரசு தரப்பு, நாடு முழுக்க லாக் டவுனை அறிவித்தது. இதனால் ஒட்டு மொத்த பொருளாதார நடவடிக்கைகளும் முழுமையாக ஸ்தம்பித்தது என்கிறது ராய்ட்டர்ஸ் அறிக்கை.
இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த ஜனவரி 2020 & பிப்ரவரி 2020 மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாகவே நடைபெற்றது, ஆனால் மார்ச் மாதத்தில் அறிவித்த லாக் டவுனால், ஜனவரி பிப்ரவரியில் கண்ட ஏற்றம் எல்லாம், மார்ச் மாத லாக்டவுன், சரிகட்டிவிடும் போலிருக்கிறது என்கிறார் ஹெச் எஸ் பி சி-யின் பொருளாதார வல்லுநர் ஆயுஷி.
கடந்த மே 20 - 25-ம் தேதி வரை சுமாராக 52 பொருளாதார வல்லுநர்களிடம் நடத்திய சர்வேயில், இந்தியப் பொருளாதாரம், மார்ச் 2020 காலாண்டில், சுமாராக 2.1 % வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம். இது கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய பொருளாதாரம் காணும் மிகக் குறைந்த வளர்ச்சி என்கிறார்கள். அதிலும் 6 பொருளாதார வல்லுநர்கள், இந்தியப் பொருளாதாரம், மார்ச் 2020 காலாண்டில் வீழ்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.
இந்த மே 29, 2020 அன்று, ஜனவரி 2020 - மார்ச் 2020 காலாண்டுக்கான, ஜிடிபி தரவுகளை வெளியிட இருக்கிறது மத்திய அரசு.
எதிர்பாராத இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, மார்ச் 2020-ல் சரியலாம் என்கிறார் கேப்பிட்டல் எகமானிக்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் ஷிலன் ஷா (shilan shah). அதோடு, கொரோனா வைரஸ் லாக் டவுன் நீட்டிப்பால், இந்த ஆண்டில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக, வீழ்ச்சி காணும் எனவும் சொல்லி எச்சரித்து இருக்கிறார்.