கொரோனா வந்த பின், ஒரு நகரத்தில் அல்லது மாநிலத்தில் இயல்பு வாழ்கை திரும்புவதே, பெரிய நல்ல விஷயம் போல் இருக்கிறது.
ஆனால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது எனச் சொல்லலாம்.
நேற்று, மார்ச் 2020 காலாண்டுக்கான இந்திய ஜிடிபி வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருக்கலாம் என மதிப்பிட்டு இருக்கிறார்கள். அதுவே மிக மோசமான செய்தி தான். ஆனால் இதை விட மோசமான விஷயங்கள் இன்னும் வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன?
பொருளாதார மந்த நிலை
கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே, இந்தியாவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கையில் பணம் இல்லாமல் மக்கள் மெல்ல தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டார்கள். அதற்கு சிறந்த உதாரணம், ஆட்டோமொபைல் துறையின் விற்பனை ஒவ்வொரு மாதமும் டல்லடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது தான். அப்போதே இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார மந்த நிலையைப் பார்த்தோம்.
பொருளாதார நடவடிக்கைகள்
ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்தியாவில், கொரோனா வைரஸுக்காக அறிவித்த லாக் டவுனால், மேற்கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. நேற்று இந்தியாவின் ஜிடிபி குறித்த தரவுகள் வெளியாவதற்கு முன்பே, ஷிலன் ஷா என்கிற பொருளாதார நிபுணர், இந்தியாவின் எல்லா பொருளாதாரத் நடவடிக்கைகளும் சரிவை சந்தித்து இருப்பதாகச் சொல்லி இருந்தார்.
ஏப்ரலில் எதிரொலி
சுற்றுலா பயணிகள் வரவு, ரயில் பயணிகள் எண்ணிக்கை, வாகன உற்பத்தி... போன்ற இந்தியாவின் முக்கியமான பொருளாதார இண்டிகேட்டர்களில் ஏற்பட்டு இருக்கும் சரிவு, இந்த ஏப்ரலில் அதிகரித்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் ஷிலன் ஷா. எனவே இந்த காலாண்டிலும் ஒரு பெரிய ஜிடிபி சரிவை சந்திக்கலாம் என்கிறார். இவர் கேப்பிட்டல் எகனாமிக்ஸ் என்கிற நிறுவனத்தில் பொருளாதார வல்லுநராக இருக்கிறார்.
ஆர்பிஐ
சில தினங்களுக்கு முன்பு, ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.4 %-மா குறைத்த போது கூட, இந்தியாவின் ஜிடிபி 2020 - 21 நிதி ஆண்டில் சரிவை சந்திக்கலாம் எனச் சொல்லி இருந்தது, இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒருவேளை இந்தியப் பொருளாதாரம் சரிந்தால், அது 1979-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா காணும் பொருளாதார சரிவாக இருக்கும். ஆக நிபுணர்கள் சொல்வது எல்லாம் "இன்னும் மோசமான விஷயங்கள் வர இருக்கின்றன" என்பது தான்.