சர்வதேச அளவில் டிஜிட்டலுக்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், சமீப காலமாகவே இந்திய ஐடி துறையானது வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
எனினும் தேவை அதிகரித்து வர வர, ஐடி துறையில் பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வருதல், பிளெக்ஸி பணியமர்த்தல் என பல கலாச்சாரங்கள் ஊடுருவி வருகின்றன.
இதற்கிடையில் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, ஐடி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இடங்களுக்கே சென்று அவர்களின் தேவையை நிறைவேற்றுதல், ஆன்லைனில் நிறைவேற்றுதல், மற்ற நாடுகளில் இருந்து சேவை புரிதல் என பலவகையிலும் தங்களது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
சேவை மையங்கள்
அதிகரித்து வரும் டிஜிட்டல் தேவைகளுக்கு மத்தியில் கடந்த சில ஆண்டுகளில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கனடா, மெக்ஸிகோ, பிரேசில் உள்ளிட்ட பல இடங்களில் தங்களது இருப்பினை (சேவை மையங்கள்) அமைத்து வருகின்றன.
எதற்காக அச்சம்
இது இந்திய ஐடி ஊழியர்களுக்கு தேவையினை குறைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் இருந்தாலும், அவைகள் அமெரிக்காவில் கணிசமான பணியாளர்களை பணியமர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தட்டி பறிக்கப்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
வாய்ப்பு குறையுமோ?
எனினும் தங்கள் அருகில் இருக்கும் சேவை வளங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் அமெரிக்க வாடிக்கையாளர்கள், அங்கு உள்ளூர் ஊழியர்கள் இருந்தால் பரவாயில்லை என எதிர்பார்க்கின்றனர். இதுபோல மற்ற நாடுகளிலும் இதே நிலைக்கு தான் மாறி வருகின்றன. இதனால் இந்திய ஊழியர்களுக்கு வாய்ப்பு குறையுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அதென்ன ஆன்சோரிங், ஆஃப்ஷோரிங்
அதெல்லாம் சரி அதென்ன? ஆன்சோரிங், ஆஃப்ஷோரிங்.
ஆன்சோரிங் என்பது அதே ஊரில் உள்ள சேவை வழங்குனர்களுக்கு வழங்கும் அவுட்சோர்சிங்கை குறிக்கிறது.
ஆஃப்ஷோரிங் என்பது தொலை தூர நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் வழங்குவதை குறிப்பது.
மல்டிஷோரிங் தான் பெஸ்ட்
நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருந்து சேவை செய்யும் போது, செலவினங்களை குறைக்க முற்படுகின்றது. எனினும் இந்த இரண்டு சேவையும் செய்யும் நிறுவனங்கள் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளன. உதாரணத்திற்கு கொரோனா போன்ற தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட லாக்டவுன் மத்தியில், பிளெக்ஸி முறையில் நிறுவனங்கள் பணியாற்றியது போன்ற சாதகமான (multi-shore delivery model) விஷயமாக பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் விருப்பம்
சமீபத்திய காலமாக அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் சில, உள்ளூரில் உள்ள பணியாளர்களை பணியமர்த்த தொடங்கியுள்ளன. இது கடினமான குடியேற்ற கொள்கைகளில் உள்ள பிரச்சனைகளை குறைக்க உதவும். மாறுபட்ட திறமைகள் என நிறுவனத்திற்கு சாதகமான பல விஷயங்கள் உள்ளன.
இன்ஃபோசிஸ் நிலவரம் என்ன?
உதாரணத்திற்கு செப்டம்பர் 2020ல் இன்ஃபோசிஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணியமர்த்தியது. இது 2022ல் 25,000 ஊழியர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதோடு கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் ஆறு சேவை விநியோக மையங்களை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் திட்டம் இது தான்
இவ்வாறு தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டும், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாகவும், இன்ஃபோசிஸ் நிறுவனம் சமீபத்தில் கனடா, மிசிசாகா மற்றும் கல்கேரியில் இரண்டு டெவலப்மெண்ட் செண்டர்களை திறந்தது. மேலும் கனடாவில் அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பினை 4,000 பேராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
விப்ரோவின் விரிவாக்கம்
மேற்கண்ட டெவலப்மெண்ட் செண்டர்கள் தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்கும், அடுத்த தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்கும் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போன்று விப்ரோ நிறுவனம் ருமேனியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தங்களது சேவை மையங்களை நிறுவியுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு வேகமாக சேவை செய்ய உதவவதாகவும் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ்-சின் விரிவாக்கம்
இதே போன்று டிசிஎஸ் நிறுவனம் தனது சர்வதேச வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, பிரமெரிக்கா சிஸ்டம்ஸ் அயர்லாந்து லிமிடெட் என்ற நிறுவனத்தினை, ப்ரூடென்ஷியல் பைனான்சியல் இன்க் நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் வாங்கியது. இந்த நிறுவனம் ஏற்கனவே 1,500 ஊழியர்களுக்கும் மேற்பட்டவர்களை கொண்டுள்ளது. இந்த மையம் அயர்லாந்து, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க டிசிஎஸ் அருகிலுள்ள திறன்களை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுட்சோர்சிங் குறையலாம்
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த உள்ளூர்மயமாக்கல் என்பது, படிப்படியாக அதிகரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க ஆப்ஷோரிங் முறையை விரும்பினாலும், தடைபடாத சேவைக்கு நிறுவனங்கள் அருகில் இருப்பதையே எதிர்பார்க்கின்றன. இதன் மூலம் உலகளாவிய அளவில் திறன் மிகுந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படாலும், அவுட்சோர்சிங் குறையலாம் என்பது கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது.
நிறுவனங்கள் சரிவினைக் காணலாம்
இந்தியாவினை பொறுத்தவரையில் பல சிறு ஐடி நிறுவனங்களுக்கு, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் பணிகள் அதிகம் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது அந்தந்த நாடுகளிலேயே இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணிகள் கிடைக்கும்போது, இந்தியாவில் உள்ள பல சிறு ஐடி நிறுவனங்கள், ஸ்டார்டப்கள் பாதிப்பினை காணலாம்.
பாதிப்பு தான்
இதனால் வேலைவாய்ப்பிலும் இழப்பினை சந்திக்கலாம். சொல்லப்போனால் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்கள் தற்போது சர்வதேச அளவில் தங்களது சேவையினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், உள்ளூர் பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன. ஆக இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கும், சிறு ஐடி நிறுவனங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். நிறுவனங்கள் மல்டிஷோரிங் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்தாலும், இது எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.