இந்திய ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் அமெரிக்க ஊழியர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதிவியேற்றிய நாள் முதல் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவது நாம் அனைவருக்கும் தெரியும் அதிலும் மிக முக்கியமாக இந்தியர்களுக்கு (வெளிநாட்டவர்களுக்கு) கொடுக்கப்படும் விசா.
இந்திய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொடர் நெருக்கடியின் காரணமாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் புதிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களைக் காட்டிலும் அதிகளவிலான அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தினர். இதன் எதிரொலியாக இன்று இந்திய ஐடி நிறுவனங்களில் கிட்டதட்ட 1 லட்சம் அமெரிக்கர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
4 பெரும் நிறுவனம்
இந்தியாவின் 4 பெரும் ஐடி நிறுவனங்களின் அமெரிக்க வர்த்தகத்தில் மட்டும் சுமார் 55,000 அமெரிக்க ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என முதல் முறையாக இதுகுறித்த தகவல்களை இந்திய ஐடி நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ளது.
எப்போதும் அமெரிக்க ஊழியர்கள் பற்றிய தகவல்களை வெளியிடாத நாஸ்காம் தற்போது முதல் முறையாக வெளியிட்டுள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் கவலையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாஸ்காம்
இந்திய ஐடி நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் அமெரிக்காவில் சுமார் 20,000 அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்போசிஸ் 14,000 அமெரிக்க ஊழியர்களையும், ஹெச்சிஎல் 13,400 அமெரிக்க ஊழியர்களையும், விப்ரோ 10,000 அமெரிக்க ஊழியர்களையும் பணியில் அமர்த்தியுள்ளது.
70 சதவீத ஊழியர்கள்
அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து சுமார் 55,000 அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இது இந்நிறுவனங்களின் மொத்த அமெரிக்க ஊழியர்கள் எண்ணிக்கையில் 70 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
காக்னிசென்ட்
சிடிஎஸ் எனப்படும் காக்னிசென்ட் டெக்னாலஜி சர்வீசஸ் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தை இந்தியாவில் இருந்து இந்திய ஊழியர்களை வைத்துத் தான் நடத்தி வருகிறது.
ஆனாலும் டிரம்ப் அறிவித்துள்ள சட்ட விதிகள் மூலம் காக்னிசென்ட் தனது அமெரிக்க ஊழியர்கள் எண்ணிக்கையை 46,400 ஆக உயர்த்தியுள்ளது. 4 முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களுடன், இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை வைத்து வர்த்தகம் செய்யும் காரணத்தால் காக்னிசென்ட் உடன் சேர்த்தால் கிட்டதட்ட 1,00,000 அமெரிக்கர்கள் இந்திய ஐடி நிறுவனங்களின் பணியாற்றுகின்றனர்.
சம்பள உயர்வு
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் ஐடி ஊழியர்களுக்கான சராசரி சம்பளம் 94,800 டாலராக இருக்கும் நிலையில், டிரம்ப் கொடுத்த நெருக்கடிக்குப் பின் அதிகளவிலான அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது மட்டும் அல்லாமல் சராசரி அளவை விடும் அதிகமாகச் சம்பளத்தை அள்ளி வீசுகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.
2018ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களுக்குக் கொடுத்த சராசரி சம்பளம் 96,300 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.