இந்திய ஐடி துறையினருக்கும், ஐடி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் அப்படி ஒரு நல்ல செய்தி காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் முதல் முறையாக பதவியேற்ற உடனேயே, எடுத்த முக்கிய நடவடிக்கையே ஹெச் 1பி விசா குறித்த நடவடிக்கை தான்.
ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கர்களுக்கு தான் எதிலும் முன்னுரிமை என்று கூறிவந்தவருக்கு, கடந்த ஜூன் மாதத்தில் கொரோனாவும் சாதகமாக அமைந்தது. கொரோனாவால் அமெரிக்காவில் தொடர்ந்து வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அங்கு குரியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி உள்ளிட்ட பல விசாக்களை, கடந்த ஜூன் மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக டிசம்பர் வரை தடை விதித்தார்.
இந்திய ஐடி துறையினருக்கு மோசமான செய்தி
இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு மோசமான செய்தியாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த ஹெச் 1பி விசாவினால் அதிகம் அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களும் சீனர்களும் தான். குறிப்பாக இந்தியர்கள் தான் மிக அதிகம். இதனால் அமெரிக்கா அரசின் இந்த தடையினால் விசா காலம் முடிந்தவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப நேரிட்டது. புதியதாக விசாவுக்கு விண்ணப்பிக்கவும் முடியாமல் தவித்து வந்தனர்.
விசா கட்டணமும் அதிகரிப்பு
இதனையடுத்து ஹெச் 1பி தடையினை நிரந்தரமான முடக்க முடியாது என்ற காரணத்தினால், விசாவுக்கான கட்டணத்தினையும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக விசா தடை காலமே முடிவடைந்தாலும், விசா கட்டண அதிகரிப்பால், இது எத்தனை பேருக்கு இது சாதகமாக அமையும் என்றும் தெரியவில்லை. ஆக இதனால் வெளி நாட்டவர்கள் அமெரிக்கா செல்வது குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அரசு ஹெச் 1 பி மற்றும் எல் விசாக்களுக்கு முறையே 21 சதவீதம் மற்றும் 75 சதவீதம் கட்டணத்தினை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இது கடந்த அக்டோபர் 2020 முதல் அமலுக்கும் வந்துள்ளது. இதற்கு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது கவனிக்கதக்கது.
ஐடி துறைக்கு முக்கிய அறிவிப்பு
ஆனால் தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தெடுக்கப்படுள்ள, ஜோ பிடன், ஹெச் 1பி விசாவில் தளர்வு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான முக்கிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உண்மையில் ஐடி துறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டம்
ஏனெனில் இந்த தளர்வுகளில் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதோடு குறிப்பாக விசா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிக பலனை அடையப் போவது பல நாடுகள் என்றாலும், அதிக பலன் என்பது இந்தியர்களுக்கு தான். குறிப்பாக இந்திய ஐடி துறைக்கு தான். ஏனெனில் இதனால் மீண்டும் அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் சான்ஸ் கிடைக்கும் எனலாம்.
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம்
இதற்கிடையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று இந்திய தொழில் துறை அமைப்பான நாஸ்காம், அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை வரவேற்பதாக கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற இந்திய தகவல் தொழில்நுட்ப துறை எதிர் நோக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. ஏனெனில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் இந்திய சந்தையில், அமெரிக்காவின் பங்கு முக்கிமானது என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
நாஸ்காம் எதிர்பார்ப்பு
அதுமட்டும் அல்ல, தனது டிவிட்டர் பக்கத்தில் நாஸ்காம், NASSCOM congratulates US #PresidentElect @JoeBiden on his win என பதிவிட்டுள்ளது. அதோடு நாங்கள் அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தினை முன்னிலைப்படுத்துவதில் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர் நோக்குகிறோம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
புதியதாக பணியமர்த்தல்
அதோடு நடப்பு நிதியாண்டில் இந்திய தகவல் தொழில் நுட்ப துறையின் எதிர்பார்ப்பு 7.7 சதவீதம் அதிகரித்து, 191 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இத்துறையில் புதியதாக 2 லட்சம் பேரை வேலைக்கு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இத்துடன் மொத்த வேலைகள் 4.36 மில்லியனாகும்.
தற்காலிக அனுமதி
மேலும் விசா குறித்தான பிடனின் நடவடிக்கையினை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஹெச் 1பி விசாவினை பொறுத்த வரையில், ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது H1B விசா. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
சார்பு விசாவுக்கும் தளர்வு இருக்கலாம்
H1B விசா வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது. அதோடு சார்பு விசா (Dependent Visa), H1B விசா பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பு விசா பெற்று H1B விசா பெற்றவருடன் தங்கலாம். இதற்காக அவர்கள் H4 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மனைவி மற்றும் 21 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த சார்பு விசாவிற்கு தகுதியுடையவர்கள். ஆக தற்போது இந்த சார்பு விசாவிலும் தளர்வு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.