இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் வர்த்தகப் போக்குவரத்து வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாக விளங்கும் இந்திய ரயில்வே தற்போது நாட்டையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக மாற்ற முன்வந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தைக் கட்டமைக்க உதவிய இந்தியன் ரயில்வே, மோசமான காலத்திலும் கைகொடுத்து உதவுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் அதிகரித்து வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாகச் சுமார் 20000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற இந்தியன் ரயில்வே தனது சோனல் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சோனல் ரயில்துறைக்கு, இந்திய ரயில்வே துறை எழுதிய கடிதத்தில், 20000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக 5000 பெட்டிகளை மாற்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும் இப்பணிகளைத் துவங்கும் முன் ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை மருத்துவர்கள், பிராந்திய தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மற்றுமந் ஆயுஷ்மான் பார்த் ஆகியோரிடம் ஆலோசனை செய்து சரியான முறையில் திட்டமிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
5 சோனல் ரயில்வே துறைகள் ஏற்கனவே மாதிரி வடிவத்தை உருவாக்கி, அதைப் பற்றிய முழு விபரத்தையும் அனைத்து சோனல் ரயில்வே துறைகளுக்கும் இந்தியன் ரயில்வே அனுப்பியுள்ளது.