என்ன காற்றிலிருந்து தண்ணீரா? அதுவும் இந்திய ரயில்வே தயாரிக்கிறதா? இது நல்லா இருக்கே. இது உண்மையாவா என்றால் உண்மைதான். இந்தியாவின் தென் மத்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு முற்றிலும் புதுமையான முறையில் குடிநீரை உற்பத்தி செய்து வருகிறது.
காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யப்படும் இயந்திரம் ஒன்று கடந்த வியாழக்கிழமை (atmospheric water generator) செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
காற்றை உள்ளே இழுத்து அடுத்தடுத்த பல்வேறு உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் இறுதியில் அதனை வடிகட்டி ஒரு தொட்டிக்கு அனுப்புகிறது. இந்தத் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை அந்த இயந்திரம் உற்பத்தி செய்கிறதாம்.
இந்த புதுமையான இயந்திரம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு காற்றிலிருந்து புது முறையில் தயாரிக்கப்படும் குடிநீர், ஒரு லிட்டர் பாட்டிலுடன் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே வாடிக்கையாளர்கள் பாட்டில் கொண்டு சென்றால் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் ஒரு டம்ளர் 300 எம் எல் தண்ணீர் கண்டெய்னருடன் மூன்று ரூபாய்க்கும், இதே வாடிக்கையாளார்கள் கண்டெய்னரில் வாங்கிக் கொண்டால் 2 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே அரை லிட்டர் கண்டெய்னர் 5 ரூபாய்க்கும்., கண்டெய்னர் இல்லாமல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தென் மத்திய ரயில்வேயின் பசுமை, தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தண்ணீர் உற்பத்தி இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பயன்பாடு சிறப்பாக அமைந்தால் இதர ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற இயந்திரம் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்துள்ள இந்த குடிநீரை மத்திய நீர்வளத்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோங்க மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சரிதானே. மேலும் குறைந்த விலையில் சுத்தமான தண்ணீரும் கிடைக்கும் என்றால் இது வரவேற்க தக்க விஷயம் தானே