கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் நாடு முழுவதும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
அதன்பின் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காலத்தில் நிறுத்தப்பட்ட நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒருசில பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளதால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
இந்திய ரயில்வே கொரோனா வரைஸ் ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களையும் இந்தியன் ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிழக்கு ரயில்வே
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட புவனேஸ்வர்-தன்பாத் கரிப் ரத் எக்ஸ்பிரஸ் தவிர கிழக்கு ரயில்வேயில் இயங்கிய அனைத்து ரயில்களும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினம்-துர்க் எக்ஸ்பிரஸ்
பூரி-திகா எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும், விசாகப்பட்டினம்-பரதீப் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம்-துர்க் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 13 முதல் மீண்டும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூரி-ஹவுரா சதாப்தி எக்ஸ்பிரஸ்
பூரி-ஹவுரா சதாப்தி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 2 முதல் மீண்டும் தொடங்கும் என்றும், புவனேஸ்வர்-தன்பாத் கரிப் ரத் விரைவில் இயக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் கிழக்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டாக்கிலிருந்து ராயகடா மாவட்டத்தில் உள்ள குனுபூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலை வெள்ளிக்கிழமை முதல் 'பாசஞ்சர் ஸ்பெஷலாக' இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தான் அந்த பகுதியில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் பயணம் செய்வார்கள் என்பதால் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 15 முதல் ஏசி-3 அடுக்கு பெட்டி
மேலும் ரூர்கேலா-புவனேஸ்வர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஹவுரா-திட்டிலாகர் இஸ்பாட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா-கண்டபாஞ்சி-ஹவுரா இஸ்பாட் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களில் ஆகஸ்ட் 15 முதல் ஏசி-3 அடுக்கு பெட்டி வசதியை வழங்க முடிவு செய்துள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்ப ரயில் பெட்டிகள்
விசாகப்பட்டினம்-கொல்லம் மற்றும் விசாகப்பட்டினம்-டாடா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரளும் போது பெட்டிகள் கவிழ்வதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றும் கிழக்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.