இன்று இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக 73.22 ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது.
ரூபாயின் மதிப்பானது தொடக்கத்தில் 73.32 ரூபாயாக தொடங்கிய நிலையில், தற்போது, 73.22 ரூபாயாக சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் சற்று சரிவில் இருந்த போதிலும், ரூபாயின் மதிப்பானது சற்று வலுவான நிலையிலேயே காணப்படுகிறது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், தற்போது 130 புள்ளிகள் குறைந்து 40,660 ஆக காணப்படுகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 34 புள்ளிகள் குறைந்து 11,936 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் தூண்டுதல் தொகுப்பு பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது ரூபாய்க்கு சற்று சாதகமாகவும் அமைந்துள்ளது.
அதோடு அமெரிக்காவின் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பமும் அதிகரித்து வரும் நிலையில், இது பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதனையே காட்டுகிறது. மேலும் அமெரிக்காவின் ஊக்கத் தொகை குறித்தான எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இன்னும் சில வாரங்களில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இந்த ஊக்கத் தொகை கிடைப்பது கடினம் தான் என்றும் ஒரு தரப்பு கூறுகின்றது.
'
இதனால் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும், நிதி ஊக்கம் சம்பந்தமாக, ஒரு சூமுக நிலையை அடைவதற்கு தொலைவில் உள்ளார்கள் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் டாலரின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு பலமடைந்து வருகின்றது.
அதோடு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், இதுவரையில் சரியான தடுப்பு மருந்தும் செயல்பாட்டிற்கு வரவில்லை. அதோடு பரிசோதனை முடிவுகளும் இன்னும் சாதகமான முடிவுகளை காட்டவில்லை. இந்த நிலையில் இது உடனடி பொருளாதார மீட்புக்கு வழி வகுக்குமா என்று சந்தேகத்திலேயே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரூபாயின் மதிப்பானது 73 - 73.60 ரூபாயாக காணப்படுகிறது.
லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. சொல்லப்போனால் நிறுவனங்களில் உபயோகப்படுத்தும் எரிபொருட்களின் தேவையானது முன்பை போல் முழுமையாக அதிகரிக்கவில்லை. அதோடு விமானங்களும் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் கச்சா எண்ணெய் தேவையானது நமது நாட்டில் குறைவாகவே உள்ளது. நாம் உபயோகப்படுத்தும் எண்ணெயில் பெரும்பகுதி இறக்குமதி செய்வது தான். ஆக தேவை குறைவாக உள்ளதால் இறக்குமதி குறையும். ஆக இதுவும் ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது.