மும்பை: அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தை தொடக்கத்தில் கிட்டதட்ட 1% வீழ்ச்சி கண்டு 74.34 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த மதிப்பானது வரலாற்று வீழ்ச்சியான 74.48 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆசிய நாணயங்களில் மிக மோசமான நாணயமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், ரூபாய் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என்ற பயம் மக்கள் மனதில் நிலவி வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஒரு பயத்தினை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். மேலும் இன்று வெளியாகவிருக்கும் சில்லறை பணவீக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.
விசா ரத்து
இது தவிர இந்தியா தற்போது பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுபடுத்தும் வகையில், பல நாட்டு மக்கள் இந்தியாவில் நுழைய வழங்கப்பட்ட விசாவினை ரத்து செய்துள்ளது. இதே போல் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் அடுத்த 30 நாட்களுக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் அத்தனை பயணங்களையும் தடை செய்துள்ளதுள்ளார். இதற்கும் முக்கிய காரணம் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது. .
இது பெரும் தொற்று நோய்
மேலும் உலக சுகாதார மையம் தற்போது உலகப் பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதன் தாக்கத்தினால் கச்சா எண்ணெய் விலையானது 7% சரிந்துள்ளது. அதிலும் இந்த வாரத்தில் மட்டும் 25% மேலாக சரிந்துள்ளது. மேலும் தற்போது சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கு இடையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு விலையுத்தம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பயணக்கட்டுப்பாடு
இதற்கு மத்தியில் பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கல் 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்கு மற்றும் கடன் சந்தைகளில் விற்றுள்ளனர். இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மேலும் அழுத்தத்தையே உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் -19 மக்களை ஒரு வகையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது எனலாம். மேலும் வீட்டிலேயே முடங்கிகிடக்கும் அளவுக்கு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்திலும் தாக்கம் ஏற்படலாம்
இது இப்படியே தொடர்ந்தால் சீனாவினை போல் வர்த்தகமும் முடங்கிபோகும் நிலை வரலாம். ஆக இது பல துறைகளிலும் மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இது வர்த்தக நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உருவாக்கும். இதன் விளைவாக சந்தையில் தலைகீழ் மாற்றம் வரலாம். எனவே இந்த உணர்வுகள் சந்தையினை இன்னும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இது ரூபாயின் வீழ்ச்சிக்கு மேலும் வழிவகுத்தது என்றே கூறலாம்.
பங்கு சந்தைகளும் சரிவு
இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 2434 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 33,268 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 730 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,727 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தற்போது 74.14 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.