அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலத்த வீழ்ச்சியை கண்டு வருகிறது.
அதிலும் தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவால், இந்தியாவில் முதன் முதலாக ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.
அதே போல் உலகம் முழுக்க தனது காலடியை பரப்பி வரும் கொரோனாவால் இதுவரை 4,971 பேர் இறந்துள்ளதாகவும், 1,34.558 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
சந்தையில் மோசமான மனநிலை
முதன் முதலில் சீனாவில் தோன்றிய கொரோனவால் 3,000 மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் தற்போது பல நாடுகளுக்கு பலமடங்கு வேகத்தில் பரவி வருகிறது. அதிலும் உலக சுகாதார மையம் இது ஒரு பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த கோவிட் -19 உலகளாவிய சந்தையில் ஒரு மோசமான மன நிலையை உருவாக்கியுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இந்த அழுத்தம் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளை இந்த மோசமான நிலைமையை சமாளிக்க நடவடிக்கை தயாராக இருக்க தூண்டுகிறது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் முதலீட்டாளர்களை பாதுக்காக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாக உறுதியளிக்க தூண்டுகிறது.
வட்டி குறைப்பு
இதனை தெளிவுபடுத்தும் விதமாக அமெரிக்கா ஃபெடரல் வங்கி, இங்கிலாந்து மத்திய வங்கிகள் பலர் அவசர அவசரமாக வட்டியை குறைத்துள்ளனர். இருப்பினும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் பயம் காரணமாக பத்திரங்கள் மற்றும் தங்கம் போன்ற பாதுகாப்பான வழிகளில் முதலீட்டாளர்கள் திரண்டு வருவதால், பங்கு சந்தைகள் முதல் அந்தந்த நாட்டு நாணயங்கள் வரை வீழ்ச்சி கண்டு வருகின்றன.
ரூபாய் வீழ்ச்சி
குறிப்பாக சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 0.4% வீழ்ச்சி கண்டு 74.48 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த முந்தைய வரலாற்று வீழ்ச்சியான 74.50 அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 11, 2018 அன்று ரூபாய் இந்தளவுக்கு கடைசியாக வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
நாளுக்கு நாள் கொரோனாவால் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். சொல்லப்போனால் இருக்கும் முதலீடுகளையே வெளியே எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்திய சந்தைகள் பாதாளம் நோக்கி பாய்ந்துள்ளன. குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் 33,164 கோடி ரூபாய் பங்கு சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து வெளியேறியுள்ளது.
மோசமான வீழ்ச்சி
இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றம், இந்தியாவில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளினால் பொருளாதாரத்தின் நிலைமை என்னவாகுமோ என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆசிய கரன்சிகளின் மத்தியில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. ஆசிய நாணய மதிப்புகளில் இந்திய ரூபாய் மிக மோசமான இரண்டாவது நாணயமாக உள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி கடந்த மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு 4.12% சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்னிய கையிருப்பு உள்ளது
மேலும் ரிசர்வ் வங்கி தங்களது அன்னிய கையிருப்பு விகிதமானது வியாழக்கிழமையின் படி, 487.24 பில்லியன் டாலர் உள்ளதாகவும், இது எந்தவொரு அவசர தேவையையும் சந்திக்க வசதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.அதே போல கடந்த வியாழக்கிழமையன்று வெளியான சில்லறை பணவீக்க விகிதம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பிப்ரவரியில் சற்று குறைந்திருந்தாலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது வீழ்ச்சியாகும். அதோடு இது ரிசர்வ் பேங்க் நிர்ணயித்த இலக்கினை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக பல காரணிகள் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. எனினும் இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில் காலையில் அவ்வளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும் தற்போது ரூபாயின் மதிப்பு 0.44% வீழ்ச்சி கண்டு 73.93 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.