இந்தியா டெலிகாம் சந்தை பெரு நகரங்களைத் தாண்டி தற்போது கிராம மக்களையும் நேரடியாகச் சென்றடையத் துவங்கியுள்ளது. மத்திய அரசு இதற்காகப் பிரத்தியேகமாகத் திட்டங்களை உருவாக்கியுள்ளதன் பயன் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய கிராம மக்கள் மத்தியில் இண்டர்நெட் பயன்பாட்டு அளவு கடந்த ஒரு வருடத்தில் 400 சதவீதம் அதிகரித்துள்ளது என அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகிறது. இதன் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இண்டர்நெட்-க்கான தாகம் எந்த அளவிற்கு உள்ளது எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகள்
இந்திய கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு வைபை ஹாட்ஸ்பாட் மற்றும் பைபர் டூ ஹோம் சேவை அளிக்க அரசு புதிய திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 13 லட்சம் பேர் இணைப்பைப் பெற்று உள்ளனர். டிசம்பர் மாதத்திற்குள் இதன் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத்நெட் ஆப்டிக் பைபர் திட்டம்
பாரத்நெட் ஆப்டிக் பைபர் திட்டத்தை மத்திய அரசின் காமன் சர்வீஸ் சென்டர் பிரிவு நிர்வாகம் செய்து வருகிறது. இந்தியா முழுவதும் இருக்கும் சுமார் 1 லட்சம் பஞ்சாயத்துகளில் இண்டர்நெட் இணைப்பை ஹாட்ஸ்பாட் மற்றும் பைபர் டூ ஹோம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
13,000 டெரா பைட் டேட்டா
இத்திட்டத்தின் மூலம் ஜூன் மாதம் வரையில் சுமார் 13,000 டெரா பைட் அளவிலான இண்டர்நெட் டேட்டா பயன்படுத்தப்பட்டு உள்ளது. 2020ல் இதன் அளவு வெறும் 6,000TB மட்டுமே, 2019ல் 300 முதல் 400TB வரையில் மட்டும் இருந்தது.
இண்டர்நெட் தேவை
இந்த வளர்ச்சி இந்தியக் கிராமங்களில் இண்டர்நெட் சேவைக்கான தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் இந்தியாவில் பெரு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மத்தியிலான இடைவெளியை இந்த இண்டர்நெட் மூலம் தீர்க்க முடியும்.
அறிவுசார் வளர்ச்சி
குறிப்பாக இண்டர்நெட் வாயிலாகக் கல்வி, அரசு திட்ட தகவல்கள், மக்களுக்குத் தேவையான அனைத்தும் அளிக்கப்படுவதன் மூலம் அறிவுசார் வளர்ச்சி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும் என அரசு நம்புகிறது.
CSC அமைப்பு
மேலும் அரசின் CSC ஈ-கவர்னன்ஸ் சர்விசஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது 40000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பாரத்நெட் திட்டத்தின் முதல் கட்ட திட்டத்தில் 1,15,000 பஞ்சாயத்துகளில் இண்டர்நெட் சேவை அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.