கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் டெல்லியை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் நடந்த போட்டி ஒன்றில் பிரெஞ்ச் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவதாகவும் சர்வதேச கவனத்தைப் பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ட்ரோன் லைட் ஷோ
டெல்லியில் ஐஐடியில் படித்த மாணவர்கள் ஆரம்பித்த பாட்லாப் டைனமிக்ஸ் என்ற ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம் வானத்தில் சுமார் 1,000 ட்ரோன்கள் மூலம் வானத்தையே ஒளிரச் செய்த லைட் ஷோவை நடத்தி உள்ளது. ஜூன் 26ஆம் தேதி அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் 45 ஆவது சுதந்திர தினத்திற்காக ட்ரோன் லைட் ஷோ நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
பிரெஞ்ச் நிறுவனம்
இந்த ஷோவை நடத்த பிரெஞ்ச் நிறுவனம் மிகப்பெரிய அளவில் போட்டியில் இருந்த நிலையில் பிரெஞ்ச் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு டெல்லியை சேர்ந்த பாட்லாப் டைனமிக்ஸ் நிறுவனம் அந்த நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை பெற்றது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் லைட் ஷோவாக இந்த நிகழ்ச்சி கருதப்ப்டுகிறது.
கடும் போட்டி
இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பிரெஞ்ச் நிறுவனத்திடம் கடுமையாக போட்டியிட்டோம் என்றும் ஆனால் 800 ட்ரோன்கள் கொண்ட ஒரு நிகழ்ச்சியை நாங்கள் நடத்துவதற்கு ஆகும் செலவை, 300 ட்ரோன்களுடன் மட்டுமே பிரெஞ்சு நிறுவனம் லைட் ஷோவுக்கு பயன்படுத்தும் விலையோடு ஒப்பிட்டதால் எங்கள் நிறுவனத்திற்கு இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான உரிமம் கிடைத்தது என்று இந்த நிறுவனங்களில் இணை இயக்குனர்களில் ஒருவரான சரிதா அஹ்லாவத் அவர்கள் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 23 பணியாளர்களை அனுப்பினோம் என்றும், தற்போது வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது என்றும் சரிதா அஹ்லாவத் மேலும் தெரிவித்துள்ளார்.
முதல் நிகழ்ச்சி
டெல்லியில் நாங்கள் நடத்திய முதல் ட்ரோன் லைட் ஷோவை இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் நேரடியாக பார்த்தனர் என்பதும் அதை பற்றி அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பதிவு செய்ததன் காரணமாக தான் எங்கள் நிறுவனம் தற்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளது என்றும் சரிதா அஹ்லாவத் மேலும் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - மாலத்தீவு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவில் ட்ரோன் லைட் ஷோ நடத்த எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும் உலக அளவில் இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு 4 முதல் 5 லட்சம் டாலர்கள் செலவாகும் என்றும் சரிதா தெரிவித்துள்ளார்.
ஐஐடி மாணவர்கள்
டெல்லி ஐஐடியில் படித்த இரண்டு மாணவர்கள் தொடங்கிய இந்த பாட்லாப் டைனமிக்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பரில் தலைநகர் டெல்லியில் நடந்த லைட் ஷோ மூலம் பார்வையாளர்களை திகைக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணம், மனித டிஎன்ஏ மற்றும் பல்வேறு வகையன பொருட்களை பிரதிபலித்ததன் மூலம் ட்ரோன் லைட்ஷோவை வெற்றிகரமாக நடத்தியது.
கணினி
இந்த லைட்ஷோவில் காட்டப்பட்ட நிறங்கள், நிழல்கள் மற்றும் வடிவங்களை மாற்றி அமைக்க தரையிலிருந்து ஒரு கணினி மூலம் இயக்கப்பட்டது என்றும், ஒரு லைட்ஷோவை வழக்கமாக 8 முதல் 10 நிமிடங்கள் நடத்துவோம் என்றும், அவை 50 மீட்டர் உயரத்தில் ஆறு முதல் எட்டு வடிவங்களை உருவாக்கி பார்வையாளர்களை கவரும் வகையில் நடத்தப்படும் என்றும் பாட்லாப் டைனமிக்ஸ் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் லைட் ஷோ
சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது 1874 ட்ரோன்களால் உருவாக்கப்பட்ட லைட்ஷோவில் நமது பூமி கிரகமே மெல்ல மேலே மிதப்பது போன்ற ஒரு கண்காட்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சர்வதேச நிறுவனங்களுக்கு இணையாக இந்திய நிறுவனங்களும் லைட்ஷோவை நடத்துவதில் தற்போது புகழ் பெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றாக பாட்லாப் டைனமிக்ஸ் நிறுவனம் இருந்து வருவது இந்தியாவுக்கே ஒரு பெருமைதான் என்பது குறிப்பிடத்தக்கது.