இந்தியாவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு மற்றும் அன்னிய முதலீட்டுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முக்கியமானதாக விளங்கிறது. குறிப்பாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஐபிஓ வெளியிட தயாரான நிலையில் அனைத்து தரப்பினருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய ஸ்டார்ட்அப் துறையைச் சார்ந்த இருவரின் மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பன்குரி ஸ்ரீவஸ்தவா
பன்குரி ஸ்ரீவஸ்தவா, வெறும் 32 வயதே ஆன பெண் தொழில்முனைவோரான இவர், பெண்களுக்கான சோசியல் கம்யூனிட்டி பிளாட்பார்ம் தளமான பன்குரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்நிறுவனம் முதலீட்டை ஈர்த்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல முன்னணி நிறுவனங்களில் இருந்து ஊழியர்களைப் பணியில் சேர்த்தது.
பன்குரி தளம்
இந்நிலையில் பன்குரி ஸ்ரீவஸ்தவா 24ஆம் தேதி டிசம்பர் மாதம் மாரடைப்புக் காரணமாக இறந்துள்ளார். இந்தச் செய்தியை டிசம்பர் 27ஆம் தேதி இந்நிறுவனத்தின் சமுக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. 2019ல் பெண்களுக்காகப் பெண்களால் உருவாக்கப்பட்ட பன்குரி தளத்தில் இன்று பலர் பணியாற்றி வருகின்றனர்.
3.2 மில்லியன் டாலர்
பன்குரி நிறுவனம் சிகோயா கேப்பிடல் நிறுவனத்தின் தலைமையில் நடந்த முதலீட்டுச் சுற்றில் சுமார் 3.2 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்தது. பன்குரி ஸ்ரீவஸ்தவா இதற்கு முன்பு ரென்டல் ஸ்டார்ட்அப் நிறுவனமான Grabhouse-ஐ உருவாக்கினார்.
Grabhouse - குவிக்கர்
2016ல் Grabhouse நிறுவனத்தைக் குவிக்கர் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் 2019ல் பன்குரி நிறுவனம் துவங்கப்பட்டு மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்த நிலையில் பன்குரி ஸ்ரீவஸ்தவா மாரடைப்புக் காரணமாக மரணம் அடைந்துள்ளது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நரேன் குப்தா
பன்குரி ஸ்ரீவஸ்தவா-வை தொடர்ந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சிறிதும் பெரிதுமாக முதலீடு செய்த முன்னணி முதலீட்டு நிறுவனமான நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நரேன் குப்தா இன்று இறந்துள்ளார்.
நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ்
73 வயதான நரேன் குப்தா தனது நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் வாயிலாகப் போஸ்மேன், டெல்ஹிவரி துர்வா, அன்அகடமி எனப் பல யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்குள்ளார். இந்த வென்சர் கேப்பிடல் சந்தையில் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் நிறுவனம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
நரேன் குப்தா ஐஐடி
நரேன் குப்தா ஐஐடி டெல்லியில் இளங்கலை பட்டமும், கலிபோர்னியா டெக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் PhDயும் பெற்றவர். நரேன் குப்தா என அழைக்கப்படும் நரேந்திர குப்தா 1980ல் Integrated Systems என்னும் நிறுவனத்தை உருவாக்கி அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு வெற்றிபெற்றார்.
நரேன் குப்தா முதல் நிறுவனம்
இதன் பின்பு Integrated Systems நிறுவனத்தை வின்டு ரிவர் என்னும் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு 2009ல் அமெரிக்காவின் இன்டெல் இந்நிறுவனத்தை 900 மில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஸ்டார்ட்அப்
இதன் பின்பு 2006ல் சுவிர் சுஜன் மற்றும் சந்தீப் சிங்ஹால் ஆகியோர் உடன் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிக் கடந்த 15 வருடமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார்.