சர்வதேச வங்கி கட்டமைப்பை ஆட்டிவைத்துள்ள சிலிக்கான் வேலி வங்கியின் திவால் சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது மட்டும் அல்லாமல் ஆசிய, ஐரோப்பிய, பிரிட்டன் வங்கி துறையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதற்கு கிரெடிட் சூயிஸ்-ன் பணபுழக்க பிரச்சனை ஒரு முக்கிய உதாரணம்.
இந்த நிலையில் மார்ச் 14 ஆம் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சுமார் 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரன் நடத்திய முக்கியமான கூட்டத்தில் சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் பணத்தை கையாள்வதில் இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சகத்திடமும் இதுக்குறித்து பேசினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வியாழனன்று, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சொந்தமான 1 பில்லியன் டாலர் டெபாசிட்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிலிக்கான் வேலி வங்கியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சகல வசதிகளை அளிக்கும் ஒரு வங்கியாக இருக்கும் காரணத்தால் இவ்வங்கியில் இருக்கும் 90 - 95 சதவீத தொகை ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுடையது. இந்த நிலையில் SVB வங்கி திவாலானது மூலம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப்
இப்படி அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் வர்த்தகம் செய்யும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சொந்தமான 1 பில்லியன் டாலர் டெபாசிட்கள் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியில் உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு
உலக நாடுகளில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருந்த சிலிக்கான் வேலி வங்கியின் (SVB) திவாலானது மூலம் உலக நிதி அமைப்பு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரையில் பாதிப்புகள் பதிவாகியுள்ளது, அமெரிக்க அரசின் நிதி ஆதரவு மற்றும் உத்தரவாதம் ஆகியவை மூலம் பெரிய பிரச்சனை தடுக்கப்பட்டு உள்ளது.
குஜராத் GIFT City
இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கியில் இருந்த 1 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான இந்திய ஸ்டார்ட்அப்களின் டெபாசிட்கள் குஜராத் GIFT City வங்கிக்கு மாற்றப்பட்டதாக தனது தகவல் கிடைத்துள்ளதாக ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
முக்கிய உதவிகள்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் பணத்தை இந்தியாவில் இருக்கும் வங்கிகளுக்கு மாற்றும் வாய்ப்பு குறித்தும், SVB வங்கியில் இருக்கும் பணத்தை வேகமாக இடமாற்றம் செய்ய அமெரிக்காவில் இருக்கும் இந்திய வங்கிகளின் கிளைகள் உடனடி அனுமதி வழக்கவும், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் தனது பணத்திற்கு எதிராக இந்திய வங்கிகள் கடன் கொடுக்கும் திட்டம் குறித்தும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நிதியமைச்சகத்திடம் பேசியதாக தெரிகிறது.
ICICI வங்கி
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ICICI வங்கி செவ்வாய்க்கிழமை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அனைத்து டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் சேவைகளை ஒரே இடத்தில் மொத்தமாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கிப்ட் சிட்டி-யில் ஐசிஐசிஐ வங்கி
குஜராத்-ல் இருக்கும் குளோபல் பைனான்சியல் மற்றும் ஐடி ஹப் ஆக இகுக்கும் கிப்ட் சிட்டியில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி கிளையில், இவ்வங்கியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி இந்த சேவையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.