ஏற்கனவே இந்தியப் பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்பதை அரசு வெளியிடும் தரவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி, கடந்த செப்டம்பர் 2019-ல் வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டதற்கு, தேவை சரிவு (Demand drop) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதோடு சமீபத்தில் வெளியான, நவம்பர் 2019-ம் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (CPI) ஒட்டு மொத்த விலை வாசி 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, உணவுப் பொருட்களின் விலை வாசி 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, மொத்த விலைப் பணவீக்கம் (WPI) 0.58 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது எல்லாம் நம்மை அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் உள்ளாக்குகின்றன.
தொழில் துறை
இது எல்லாம் போக, கடந்த அக்டோபர் 2019-ம் மாதத்துக்கான, இந்தியப் பொருளாதாரத்தின் தொழில் துறை உற்பத்தியைப் பிரதிபலிக்கும் IIP - Index of Industrial Production தரவும் -3.8 சதவிகிதமாக சரிவை சந்தித்து இருக்கிறது. இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் சரிவு, வளர்ச்சி இல்லாத நிலை. அதோடு போதாக் குறைக்கு வேலை இல்லா திண்டாட்டம் வேறு. இதற்கிடையில் தான் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா.
அர்விந்த் கேஜ்ரிவால்
ஒரு தனியார் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் "இப்போது இந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வருவதற்கான அவசியம் என்ன..? தற்போது நாட்டில் மக்களுக்கு வேலை இல்லை, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி அதிகரித்துக் கொண்டு இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார்.
அழுகுரல்
மேலும் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் "மக்கள் வேலை வாய்ப்புகளுக்காகவும், பொருட்களின் விலை வாசி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருப்பதற்காகவும் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பெரிய பிரச்னைகளைத் தான், நம் தேசம் இப்போது கவனிக்க வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார்.
அழைப்பு
"இந்த நேரத்தில், மத்திய அரசு, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து, பொருளாதார மந்த நிலை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த நேரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக இந்த நேரத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா தேவையே இல்லை" என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார் டெல்லி முதல்வர்.
காது கொடுத்து கேட்கணும்
மத்திய அரசு கொண்டு வரும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, இந்தியா முழுக்க 22 பல்கலைக்கழக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். மாணவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்ல வருவதைக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார் அர்விந்த்.
கேட்குமா
ஒரு வகையில் டெல்லி முதல்வர் மற்றும் முன்னாள் வரித் துறை அதிகாரி அர்விந்த் கேஜ்ரிவால் சொல்வது சரியாகத் தான் படுகிறது. இந்தியப் பொருளாதார சரிவினால் தனி நபர்களின் வேலை வாய்ப்புகளும், தனி நபர்களின் வேலை வாய்ப்பு இழப்புகளால் இந்தியப் பொருளாதாரமும் சரிந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. நம் நண்பர்கள் பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லி முதல்வரின் அறிவுரையை கேட்குமா மத்திய அரசு..?