இந்தியாவில் ஸ்மார்ட்போனின் தரம் மற்றும் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதே நேரத்தில் அதன் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் கல்வி, வேலை, பொழுதுபோக்கு எனப் பல காரணங்களுக்காக இந்திய மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு
கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்தில் மக்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்த அலுவலக வேலைகளைச் செய்து வருவதாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்தே பயின்று வருவதாலும், பொழுதுபோக்கிற்கான அனைத்தையும் ஸ்மார்ட்போன் வாயிலாகவே செய்யும் காரணத்தால் இந்த லாக்டவுன் காலத்தில் ஸ்மார்ட்போன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
7 மணிநேரம்
எனவே இந்த லாக்டவுன் காலத்தில் கல்வி, வேலை, பொழுதுபோக்கு மற்றும் இதர அனைத்து தேவைகளுக்காக மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படும் நேரம் 25 சதவீதம் அதிகரித்து 7 மணிநேரமாக உயர்ந்துள்ளது என முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான விவோ மற்றும் CMR அமைப்பு இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மிகப்பெரிய வளர்ச்சி
2019ல் இந்திய மக்கள் சராசரியாக ஒரு நாளில் ஸ்மார்ட்போனில் செலவு செய்யும் நேரம் 4.9 மணிநேரமாக இருந்த நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் 2020ல் 11 சதவீத உயர்வுடன் இந்தக் கால அளவு 5.5 மணிநேரமாக உயர்ந்தது.
இது ஏப்ரல் மாதத்தில் இருந்து 25 சதவீத உயர்வில் 6.9 மணிநேரமாகத் தொடர்ந்து நிலைப்பெற்று வருகிறது.
நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஸ்பாடிபை, அமேசான் ப்ரைம்
இந்த லாக்டவுன் காலத்தில் இந்திய மக்கள் work from home காரணமாக அலுவலகப் பணிகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் 75 சதவீதம் அதிகரித்துள்ளது, கால் செய்யும் அளவீடு 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் பொழுதுபோக்கிற்காக நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஸ்பாடிபை, அமேசான் ப்ரைம் போன்ற OTT சேவைகளைப் பயன்படுத்தும் அளவு 59 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமுக வலைதளம் மற்றும் கேமிங்
இதேபோல் சமுக வலைதளம் பயன்படுத்தும் நேரம் லாக்டவுன் காலத்தில் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடும் நேரத்தின் அளவு இந்த லாக்டவுன் காலத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
செல்பி மற்றும் புகைப்படம்
மேலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதில் மக்கள் செலவு செய்யும் நேரம் 14 நிமிடத்தில் இருந்து 18 நிமிடமாக அதிகரித்துள்ளது.
இயல்பான வாழ்க்கையில் வெளியில் செல்வது, அலுவலகம், நண்பர்கள் கூடல் எனச் சகலமும் இருக்கும் வேளையில் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க மக்கள் 14 நிமிடம் செலவு செய்யும் நிலையில், வீட்டிலேயே இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் இதன் அளவு 18 நிமிடமாக அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபமும், எரிச்சலும்
விவோ மற்றும் CMR அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஆய்வில் சுமார் 2000 பேர் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் இருந்து கலந்துகொண்ட நிலையில், சுமார் 74 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தால் கோபமும், எரிச்சலும் வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்திய மக்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது.