இந்தியப் பொருளாதாரமும், இந்திய மக்களும் கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பெரும்பாலான மக்களின் தினசரி உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் கோதுமை மாவு விலை பல வருட உச்சத்தைச் சந்தித்து நடுத்தரக் குடும்பங்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
கோதுமை மாவின் சராசரி சில்லறை விலை ஏப்ரல் மாதத்தில் ஒரு கிலோ 32.38 ரூபாயைத் தொட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி 2010க்குப் பிறகு அதிகபட்சம், அதாவது 12 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாக உள்ளது.
கோதுமை மாவு
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்திடம் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறைகள், மே 7, சனிக்கிழமையன்று கோதுமை மாவின் இந்தியச் சராசரி சில்லறை விற்பனை விலை கிலோ ரூ. 32.78 ஆக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா விலை நிலவரம்
இது ஒரு வருடத்திற்கு முந்தைய விலையை விட (கிலோ ரூ.30.03) 9.15% அதிகம். இந்தியாவில் சுமார் 156 மையங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் சனிக்கிழமையன்று வெளியான விலை பட்டியலில் போர்ட் பிளேயரில் அதிகப்படியாக ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 59, இதேபோல் மேற்கு வங்காளத்தின் புருலியாவில் மிகக் குறைவாகவும் ரூ. 22/கிலோ ஆக இருந்தது.
உற்பத்தி மற்றும் கையிருப்பு
இந்தியாவில் கோதுமை உற்பத்தி மற்றும் கையிருப்பு இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதால் கோதுமை மாவின் விலை உயர்ந்து வருகிறது, மேலும் வெளிநாட்டுச் சந்தையில் கோதுமை மாவிற்குத் தேவை அதிகரித்து உள்ளதால், இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் கோதுமை உற்பத்தியில் பெரிய அளவிலான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
ரஷ்யா ஆதிக்கம்
2019 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி 8.14 பில்லியன் டாலராக இருந்தது, உக்ரைன் சுமார் 3.11 பில்லியன் டாலர் கோதுமையை ஏற்றுமதி செய்தது. தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான போரின் காரணமாகக் கோதுமை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு உருவாகி விலை அதிகரித்துள்ளது.
விலை உயர்வு
இந்த விலை உயர்வின் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சப்பாத்தியில் இருந்து பிஸ்கட், கேக் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் தற்போது எரிபொருள் பணவீக்கம், உணவு பணவீக்கம் மக்கள் அதிகளவில் பாதித்து வருகிறது.