பொதுவாக விமானத்தில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும் என்பதும் தாய்மொழியில் அறிவிப்பு வராதா என்று தமிழ் உள்பட தென்னிந்தியர்களும், ஒருசில வட இந்திய மொழிகளை பேசுபவர்களும் ஏக்கத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக ஒருசில விமானங்களில் பிராந்திய மொழியில் அறிவிப்புகள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் பெங்களூரிலிருந்து சண்டிகருக்கு சென்ற விமானத்தின் கேப்டன் பஞ்சாபி மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறி அறிவிப்பு செய்து பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த வீடியோக்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்தி, ஆங்கிலம் மட்டுமே
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விமான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் பெங்களூரு - சண்டிகர் விமானத்தின் விமானி தனது மாநில பயணிகளை மகிழ்விக்க ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி ஆகிய இரு மொழிகளிலும் வரவேற்று பேசியுள்ளார். அவருடைய பேச்சு அந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாபியர்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. விமானத்தில் பஞ்சாபி மொழியை இதுவரை கேட்டதில்லை என்றும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பயணி ஒருவர் கூறியிருந்தார்.
விமானியின் அறிவிப்பு
அந்த விமானி, 'நாம் தற்போது பெங்களூரில் இருந்து சண்டிகர் நோக்கி விமானத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்றும் வலது பக்கம் உள்ளவர்கள் போபாலை தற்போது பார்க்கலாம் என்றும் இடது பக்கம் உள்ளவர்கள் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்றும் காமெடியாக அறிவிப்பு செய்தார்.
பயணிகள் மகிழ்ச்சி
மேலும் தங்கள் விமானத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளையும் அன்புடன் வரவேற்பதாகவும் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பயணிகளும் மாஸ்க் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விமானம் தரை இறங்கிய உடன் அனைத்து பயணிகளும் தங்களது லக்கேஜ்களை தவறாமல் எடுத்து செல்லும்படி அவர் அறிவுறுத்தினார்.
தமிழில் அறிவிப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து மதுரை சென்ற இன்டிகோ விமானத்தில் துணை கேப்டன் தமிழில் அறிவிப்புகளை செய்து அசத்தினார். வடசென்னையை சேர்ந்த அந்த விமானியின் பெயர் விக்னேஷ். அவர், 'நாம் தற்போது கடல் மட்டத்திலிருந்து 11000 அடியில் உயரத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் இன்னும் பத்து நிமிடங்களில் நாம் காவிரி ஆற்றை காணலாம் என்றும் குறிப்பாக காவிரி கொள்ளிடம் பிரியும் ஸ்ரீரங்கம் என்ற பெயரையுடைய நகரை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய மொழிகளில் அறிவிப்பு
சென்னை - மதுரை விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தது போலவே தற்போது பெங்களூரு - சண்டிகர் விமானத்தில் பஞ்சாபி மொழியில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நாளடைவில் அனைத்து விமானங்களிலும் பிராந்திய மொழிகளில் அறிவிப்புகள் சர்வசாதாரணமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.