பறக்கத் தவிக்கும் விமான நிறுவனங்கள் சரிவிலிருந்து எப்போது தான் மீண்டு வரப்போகிறதோ? இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத கொடிய அரக்கனால் இன்னும் என்னென்ன விளைவுகளை எல்லாம் சந்திக்க நேரிடுகிறதோ தெரியவில்லை.
இப்படி புலம்பும் நிலைக்கு தள்ளிவிட்டது இந்த கொரோனா. விமான துறை மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில துறைகளில் வீட்டில் இருந்து பணி செய்யலாம். சில துறைகளில் குறைந்தபட்ச ஆட்களுடன் பணியினை தொடரலாம் என்று கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
முழுமையாக இயங்கவில்லை
ஆனால் விமானத் துறையினை பொறுத்தவரையில் இந்த தளர்வுகள் எல்லாம் கைகொடுக்க வில்லை என்றே கூறலாம். ஏனெனில் விமான நிறுவனங்களின் முக்கிய வணிகமாக கருதப்படும், வெளிநாட்டு சேவையானது கடந்த சில மாதங்களாகவே முடங்கியுள்ளது. தற்போது உள்நாட்டு சேவைக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் முழுமையாக இயங்கவில்லை.
விமான நிறுவனங்கள் தவிப்பு
இது எல்லாவற்றுக்கும் நடுவில், அப்படியே முழு விமான சேவையே தொடங்கினாலும், மக்கள் உடனடியாக விமான சேவையினை பயன்படுத்துவார்களா? என்பது சந்தேகமாகத்தான் பார்க்கப்படுகிறது. அதோடு இனி எப்போது விமான சேவை தொடங்கும், எப்போது நாட்டில் இந்த நிலைமை சீரடையும். மற்ற நாடுகளுக்கு விமான சேவை எப்போது துவங்கும் என அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆக இதற்கிடையில் விமான நிறுவனங்கள் பெரிதும் சிக்கித் தவித்து வருகின்றன என்று தான் கூறவேண்டும்.
சரக்கு சேவையும் பாதிப்பு தான்
சரி பயணிகள் சேவை தான் முடங்கியுள்ளது, சரக்கு சேவை என்ன ஆச்ச எனலாம். உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் முழு உற்பத்தியினை எட்டவில்லை. அப்படியே உற்பத்தி செய்தாலும், அதனை வாங்கும் நாடுகள் தற்போது தயாராக இல்லை. ஆக இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் சரக்கு சேவை மட்டும் சரிவர இயங்கும்.
அதிரடி முடிவு
ஆக மொத்தத்தில் விமான நிறுவனங்களின் வருமானமும் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. ஆக இப்படி இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தான், விமான நிறுவனங்கள் இப்படி பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றன. இது பல துறைகளிலும் இருந்தாலும், மற்ற துறைகளில் இந்த அளவுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.
என்னென்ன நடவடிக்கை
கடந்த செவ்வாய்கிழமையன்று விஸ்டாரா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 5 -20% சம்பள குறைப்பினை செய்வதாக அறிவித்தது. ஆனால் அதனை விட ஒரு படி மேலே போய் இண்டிகோ நிறுவனம் பணி நீக்கம், சம்பள குறைப்பு, சம்பளம் இல்லா விடுமுறை என பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சம்பளம் குறைப்பு
இது குறித்து வெளியான செய்தியொன்றில், உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இண்டிகோ, அதன் ஊழியர்களுக்கு சம்பளத்தினை குறைத்து வருவதாக தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல அதன் ஊழியர்களை சம்பளம் இல்லா கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதோடு ஒப்பந்த காலம் முடிவடைந்த ஊழியர்கள் பலருக்கு ஒப்பந்தினை புதுபிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பணி நீக்கமும் உண்டு
அதோடு சில பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பினை அறிவித்து இருந்த நிலையில், தற்போது அது மீண்டும் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பயிற்சியில் உள்ள விமானிகளுக்கும் இந்த திருத்தம் இருக்கும் என்றும், இண்டிகோவின் செயல்பாட்டுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சவால்களுக்கு மத்தியில் சம்பளம் கொடுத்தோம்
பல சவால்களுக்கும் மத்தியிலும் கூட கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முழு சம்பளத்தினையும் வழங்கிய உலகளாவிய நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. ஆனால் கடந்த மே மாதத்தில் நாங்கள் முதல் சம்பள குறைப்பு நடவடிக்கையினை எடுத்தோம். அதன் பிறகு சம்பளம் இல்லா விடுமுறையினை அளித்தோம். தற்போது திறன் அடிப்படையில் மீண்டும் சம்பளம் இல்லா விடுமுறையினை அளிக்க உள்ளோம்.
இது தற்காலிக நடவடிக்கை தான்
இது ஒரு எங்களின் தற்காலிக நடவடிக்கையாகும். மே 25க்கு பிறகு விமான நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிய நிலையில் இருந்து, தற்போது ஒரு மாதத்திற்கும் மேலான நகர்வுகளுக்கு பின்பு இந்த அதிரடியான நடவடிக்கை வந்துள்ளது.
இப்போது நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டுல் 45 சதவீதம் வரை செயல்பட முடியும் என்றாலும், பயணிகளின் வருமை மூன்றில் ஒரு பங்காகவே இருந்து வருகிறது என்றும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
லாபத்திற்கு சான்சே இல்ல
இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் ததா இந்த ஆண்டு விமான நிறுவனங்கள் லாபம் ஈட்ட வழியில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் கூட அதன் திறனில் 70 சதவீதத்தினை மட்டுமே இயக்க முடியும்.
கொரோனாவுக்கு முன்பு மிகப்பெரிய நிறுவனமாக இருந்த இண்டிகோ, 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. .
இவ்வளவு பணி நீக்கம் இருக்குமா?
இண்டிகோ மட்டும் அல்ல, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்து வருகின்றன. அதோடு, சம்பளம் இல்லா விடுமுறையையும் அளித்து வருகின்றது.
ஆலோசனை நிறுவனமான CAPA India விமானத்துறையில், கொரோனா பாதிப்பினால் தொழிலாளர்களில் 30 சதவீதம் வரை, பணி நீக்கம் இருக்கக் கூடும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.