இந்தியா அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தாறுமாறான ஏற்றத்தினை கண்டது.
இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக கடந்த மாதம் இந்தோனேஷியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது.
எனினும் பின்னர் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. இன்று வரையில் உக்ரைன் பிரச்சனையானது தொடர்ந்து கொண்டே உள்ளது.
இல்லதரசிகளுக்கு நல்ல செய்தி
இதற்கிடையில் பாமாயில் மீதான ஏற்றுமதி வரியினை இந்தோனேஷியா குறைத்துள்ளது. இது ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய இல்லதரசிகளுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஊக்குவிப்பு நடவடிக்கை
பாமாயில் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளரான இந்தோனேசிய, மூன்று வார தடைக்கு பிறகு தான், சமீபத்தில் அதன் தடையை நீக்கியது. இந்த நிலையில் அதன் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய அரசின் நடவடிக்கை
இந்திய அரசு நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கச்சா பாமாயில் எண்ணெய் மீதான இறக்குமதி வரியானது 8.25%ல் இருந்து, 5.5% ஆக குறைத்துள்ளது. தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையானது அதிகமாக இருந்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்தது. அதேபோல செஸ் வரியினை 7.5% இருந்து 5% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நிலை
இந்தியாவின் 60% சமையல் எண்ணெய் விகிதமானது இறக்குமதி மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மொத்த பாமாயில் எண்ணெய் இறக்குமதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட அளவு 30% ஆகும். ஆக ஏற்கனவே உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இப்படியொரு நிலையில் இந்தோனேஷியாவின் அறிவிப்பு நலல் விஷயமாக வந்துள்ளது.
பணவீக்கம் குறையலாம்
ஏற்கனவே இந்திய அரசு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக வட்டி அதிகரித்து, வரி குறைப்பு என பலவற்றையும் செய்துள்ளது. இந்த நிலையில் இந்தோனேஷியாவின் இந்த அறிவிப்பு மேற்கொண்டு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பயனுள்ளதாக இருக்கும்.