கொரோனாவின் காரணமாக நிலவி வரும் நிச்சயமற்ற நிலையில், சில துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு ஒரு நெகிழ்வான கலப்பின (hybrid work model) வேலை மாதிரியை கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளது.
இது அப்போதைய நிலவரத்தினைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களைப் வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளக்ஸிபிள் வேலை மாதிரி
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக், நிறுவனம் ஒரு நெகிழ்வான கலப்பின (flexible hybrid work model) வேலை மாதிரியை உருவாக்கியுள்ளது. ஆனால் சமூக மூலதனத்தை உருவாக்குவதற்கான வேலைளைத் தொடங்குவதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
நிறுவனம் கவனம் செலுத்தும்
மேலும் நிலைமை எப்படி உருவாகிறது என்பதை பொறுத்து நிறுவனம் இதில் கவனம் செலுத்தும். எப்படி இருந்தாலும் பிளக்ஸிபிள் என்பது முக்கியமானதாக இருக்கும். வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும். நாங்கள் கொரோனாவின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இன்னும் முடிவு செய்யப்படவில்லை
இதனால் நாங்கள் சமூக மூலதனத்தினை உருவாக்க தொடங்குகிறோம். மேலும் அலுவலக சூழலும் எங்களுக்கு தேவை, ஆக நாங்கள் இன்னும் சரியான அணுகுமுறையை நாங்கள் முடிவு செய்ய வில்லை என்று சலீல் கூறியுள்ளார். இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நீலகனி, கொரோனா தொற்று நோய் காலத்திற்கு முன்பே நாங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை கொண்டு வந்தோம்.
வீட்டில் இருந்து பணி
ஆக இது கொரோனா தொற்றுக்கு பின்பு மிக எளிதாகி விட்டது. 40 நாடுகளில் உள்ள 2,40,000 ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவது தொழில்நுட்பங்கள், நெட்வொர்க், சைபர் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்ய வைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
டிசிஎஸ் என்ன கூறியது?
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்று அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில், இத்துறையின் ஜாம்பவானாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனம் 2025 வரை தனது ஊழியர்களில் 75 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தான் இன்ஃபோசிஸ் நிறுவனமும் இப்படி அறிவிப்பினைக் கொடுத்துள்ளது.
கொரோனா எல்லாவற்றையும் மாற்றி விட்டது?
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா பெருந்தொற்றானது மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை, வேலை என அனைத்தையும் மாற்றிவிட்டது. எனவே, ஊழியர்களின் வசதிக்கேற்ப பணியாற்றும் சூழலை வடிவமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. எனினும் அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணியாற்ற கூறவில்லை. ஏனெனில் ஊழியர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்யும்போது கிடைக்கும் பலன்களையும் நாங்கள் அறிவோம் என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
உங்கள் கருத்து என்ன?
உண்மையில் இந்த பிளக்ஸிபிள் முறை என்பது வரவேற்கதக்க விஷயம் தான். ஏனெனில் ஊழியர்கள் சில நாட்கள் அலுவலகத்திலும், சில நாட்கள் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் அல்லவா? உங்களின் கருத்து என்ன? நீங்கள் வீட்டில இருந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? பதிவிடுங்கள் உங்கள் கருத்தை.