நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம்... என்பது போல, மொத்த உலகமும் கொரோனா வைரஸால் தேங்கிக் கிடக்கிறது.
இந்த கொரோனா வைரஸ் காலத்திலும், தங்கள் கம்பெனி வேலைகளை கொஞ்சம் வழக்கம் போல செய்ய முடிகிறது என்றால் அது ஐடி கம்பெனிகள் தான்.
ஆனால் அப்படிப்பட்ட ஐடி கம்பெனியின் கெளரவ தலைவர் ஒருவரே கொரோனா லாக் டவுன் நீட்டிப்பதில், மக்கள் எதிர் கொள்ள இருக்கும் சிரமங்களைச் சொல்லி இருக்கிறார்.
19 கோடி பேர்
இந்தியாவில் சுமாராக 19 கோடி பேர், முறை சாராத வியாபாரங்கள், சுய தொழில் மற்றும் கணக்கில் வராத குட்டி குட்டி நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் லாக் டவுனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். மேலும் லாக் டவுன் நீடித்தால், இவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் இழப்பார்கள் என சொல்லி இருக்கிறார்.
வரி இழப்பு
ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியாவில் பெரும்பாலான கம்பெனிகள் 15 - 20 சதவிகித வருவாயை இழந்து இருக்கிறார்கள். இது நேரடியாக அரசின் சரக்கு மற்றும் சேவை வரி போன்ற அரசு வரி வருவாய்களில் எதிரொலிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் நாராயண மூர்த்தி.
தாக்கு பிடிக்க முடியாது
சமீபத்தில் நடந்த வியாபார தலைவர்களுக்கான ஆன்லைன் கருத்தரங்கில் பங்கேற்றார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கெளரவ தலைவர் நாராயண மூர்த்தி. அதில் "இந்த நேரத்தில் நாம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா இப்படியே, நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து லாக் டவுனில் இருக்க முடியாது" எனச் சொல்லி இருக்கிறார்
பசி
மேலும் பேசியவர் கொரோனாவால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை 0.25 - 0.50 சதவிகிதமாக இருக்கிறது என்றார். அதோடு "இந்தியாவில் லாக் டவுன் நீடித்தால், ஒரு கட்டத்தில், கொரோனா வைரஸ் நோயால் இறப்பவர்களை விட, பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிடும்" எனவும் தன் உருக்கமான கருத்தை அழுத்தமாக பதிய வைத்து இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி.
தொடர வேண்டும்
இந்த மாதிரியான இக்கட்டான சூழலில், இந்த சூழலை ஏற்றுக் கொண்டு, கொரோனா வைரஸ் உடனேயே நாம் வாழத் தொடங்க வேண்டும். கொரோனாவுக்கு முன் நாம் எனன் செய்து கொண்டு இருந்தோமோ அதை மீண்டும் செய்யத் தொடங்க வேண்டும். எளிதில் பாதிக்க வாய்ப்பு இருப்பவர்களை பாதுகாக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
அலுவகத்தில் சோதனை
அதோடு, ஐடி கம்பெனி ஊழியர்களை, அலுவலகத்துக்கு அழைத்து வந்து, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வேலை பார்க்கச் சொல்லி சோதனை செய்ய வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். நாஸ்காம் தரப்பு, ஏற்கனவே, ஐடி கம்பெனிகளிடம் 10 - 15 % ஊழியர்களுடன் செயல்பட பரிந்துரைத்து இருக்கிறார்களாம்.
ஒரு ஐடியா
அதோடு சமூக இடைவெளி விட்டு இருப்பது போன்றவைகளை எல்லாம் அலுவலகத்தில் கடைபிடிக்க முடிகிறதா என்பதையும் கண்காணிக்கச் சொல்லி இருக்கிறார்களாம். மீண்டும் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்து வர அரசு ஒரு யோசனையை முன் வைக்க வேடும். அது ஒட்டு மொத்த துறைக்கும் நாட்டுக்கும் நல்லது எனக் கோரிக்கை வைத்திருக்கிறது நாஸ்காம் தரப்பு.
நல்ல வாய்ப்பு
இந்த கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோயால், இந்திய ஐடி துறைக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுக்கும். உலக அளவில் கம்பெனிகள் தங்கள் செலவுகளைக் குறைப்பார்கள், அதோடு டெக்னாலஜிகளில் முதலீடு செய்வார்கள். உள்நாட்டு கம்பெனிகள், தங்கள் சேவைகளைத் தொடர்ந்து செய்து வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார் நாராயண மூர்த்தி.
கொரோனா
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சொல்வது கூட, ஒரு விதத்தில் சரிப்பட்டு வருமோ எனத் தோன்றுகிறது. எத்தனை நாட்களுக்கு தான் மக்கள், பசியில் வாடுவார்கள், அவர்களுக்கும் வேலை வாய்ப்புகளைக் கொடுத்தால் தானே, அவர்கள் வயிறும் நிறையும். கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே இருப்பதா... அல்லது பசிக்காக உழைப்பதா..? என்று ஒழியும் இந்த கொரோனா வைரஸ்.