இந்தியாவின் டாப் ஐடி கம்பெனிகளில் ஒன்று இன்ஃபோசிஸ். இந்த கம்பெனியின் பெயராலேயே புகழ் அடைந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி தான்.
எப்படி பல நடிகர்களுக்கு சில அடை மொழிகள் இருக்கிறதோ, அது போல நாராயண மூர்த்தி அவர்களுக்கு, இன்ஃபோசிஸ் என்பது ஒரு அடைமொழி போல் ஆகிவிட்டது. நாராயண மூர்த்தி பெரும்பாலும் தன் மனதில் பட்டதை தெளிவாக வெளிப்படுத்தக் கூடியவர்.
இப்போதும் அப்படி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார். CEO-க்களின் சம்பளத்தைப் பற்றிய தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது சார்பாக என்ன சொன்னார் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
நாராயண மூர்த்தி பேச்சு
சமீபத்தில் All India Management Association (AIMA) என்கிற அமைப்பு நடத்திய National Management Convention (NMC) என்கிற கூட்டத்தில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிதாமகர், நாராயண மூர்த்தி, கம்பெனிகளின் முதன்மைச் செயல் அதிகாரிகளின் சம்பளம் தொடங்கி பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். அவைகளைப் பற்றித் தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
CEO-க்களுக்கு நிறைய சம்பளம் வேண்டாம்
ஒரு கம்பெனியின் CEO-க்கு, அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர் வாங்கும் சம்பளத்தை விட, நியாயமான அளவுக்கு, ஒரு குறிப்பிட்ட மடங்கு அதிகம் சம்பளம் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு கம்பெனியின் கடை நிலை ஊழியர் ஆண்டுக்கு 2 - 3 லட்சம் ரூபாய் சம்பளமாக (Remuneration) பெறுகிறார் என்றால், முதன்மைச் செயல் அதிகாரிகளுக்கு 70 - 80 லட்சம் Managerial Remuneration-ஆக கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
இயக்குநர் குழு நிறுத்த வேண்டும்
ஒரு கம்பெனியில், ஒரு முக்கிய உயர் பதவி வகிக்கும் ஊழியர், கம்பெனியில் இருந்து வெளியே போகும் போது, அவர்களுக்கு ஒரு பெரிய தொகையாக severance package-ஆக கொடுக்கப்படுகிறது. அந்த ஊழியர்களின் அமைதிக்காக இது வழங்கப்படுகிறது. இந்த பழக்கத்தை கம்பெனி இயக்குநர் குழுக்கள் நிறுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி.
நியாயமற்ற நஷ்ட ஈடுகள் (unjustifiable compensation)
தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் கம்பெனிகளில், கம்பெனியின் நிர்வாகம், வலுவற்ற இயக்குநர் குழுவை நெருக்கி, நியாயமற்ற நஷ்ட ஈடுகளை (unjustifiable compensation) பெற முடிகிறது எனவும் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. அதோடு கார்ப்பரேட் கம்பெனிகளில் நடக்கும் ஊழல்களுக்கு, கம்பெனிகளின் தலைவரின் இயலாமை தான் காரணம் எனவும் சொல்லி இருக்கிறார்.
CEO-வின் சேவகர்கள்
ஒரு கம்பெனியின் இயக்குநர் குழுவை விடவும், அந்தக் கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) பலம் பொருந்தியவராகிவிட்டால், கம்பெனியின் தலைவர், CEO-வின் மகிழ்ச்சிக்காக வேலை செய்யத் தொடங்கிவிட்டால், கம்பெனிகளில் ஊழல்கள் நடக்கும் எனச் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி.
பணத்தை திருப்பி வசூலிக்க வேண்டும்
ஒரு கம்பெனியில் தவறு நடந்தால், தவறு நடந்த காலத்தில், இயக்குநர் குழுவில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி வசூலிக்க வேண்டும். கம்பெனி நிர்வாகத்துக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி வசூலிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு, கம்பெனி இயக்குநர் குழு, தன் வேலையை செய்யாததற்கு, இயக்குநர் குழு மீது, செபி, அபராதம் விதிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.