இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கொரோனா பாதிப்பு நிறைந்த காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளைச் செய்து வரும் நிலையில், புதிதாக ஒரு சேவையை ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இலவசமாகக் கோவிட் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்புக் காரணமாக இந்தியா முழுவதும் பல தரப்பட்ட மக்கள் விவரிக்க முடியாத வேதனைகளையும், இழப்புகளையும் எதிர்கொண்டு இருக்கும் நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்களுக்கு உயிர்காக்கும் விஷயமாகவே உள்ளது.
பெங்களூரில் புதிதாக கோவிட் கேர் சென்டர்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெங்களூரில் புதிதாக கோவிட் கேர் சென்டர் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புச் சிகிச்சை பிரிவு மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரடியாகக் கோவிட் சிகிச்சை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மணிபால் ஹாஸ்பிட்டல்ஸ் உடன் கூட்டணி
இன்போசிஸ் இத்திட்டத்தைச் சிறப்பான நடைமுறைப்படுத்த மணிபால் ஹாஸ்பிட்டல்ஸ் உடன் கூட்டணி சேர்ந்து துவங்கியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான அதேநாளில் அதாவது ஏப்ரல் 24 முதலே இன்போசிஸ் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேவையை அளிக்கத் துவங்கியுள்ளது.
வீட்டில் தனித்துச் சிகிச்சை
இன்போசிஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வீட்டில் தனித்துச் சிகிச்சை பெற முடியாதவர்களுக்காகப் பிரத்தியேகமாகத் துவங்கப்பட்ட சேவை என இன்போசிஸ் தெரிவித்துள்ளது. மேலும் 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
மணிபால் ஹாஸ்பிடல் விதிமுறைகள்
மேலும் சிகிச்சை, பரிசோதனை, ஆய்வுகள் அனைத்தும் மணிபால் ஹாஸ்பிடல் செய்யும் நிலையில் கொரோனா தொற்றுக்கான சிறு அறிகுறிகள், அல்லது அறிகுறியே இல்லாத பாசிடிவ் நோயாளிகளுக்கும் மணிபால் ஹாஸ்பிடல் விதிமுறைகள் படி பரிசோதனை செய்யப்பட்டு அட்மிஷன் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது.
செலவுகளை ஏற்கும் இன்போசிஸ்
மேலும் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான தங்கும் இடம், உணவு, மருத்துவர் ஆலோசனை ஆகிய அனைத்திற்கும் இன்போசிஸ் நிர்வாகமே செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், incidental costs அதாவது மருத்துவப் பரிசோதனை, மருந்துகள் ஆகியவற்றுக்கான செலவுகளை ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தேவை
இதைதொடர்ந்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், தீவிர சிகிச்சை தேவைப்படும் அனைவரும் மணிபால் மருத்துவமனைக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் கோவிட் கேர் சென்டர்
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் இந்தக் கோவிட் கேர் சென்டர் பெங்களூரில் Domlur பகுதியில் இருக்கும் ஹோட்டல் ராயல் ஆர்சிட்-ல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்று உடன் இருப்பவர்களைச் சந்திக்கவோ அல்லது உடன் இருக்கவோ அனுமதிக்கப்படுவது இல்லை.
கொரோனா தடுப்பு மருந்து
இதைத்தொடர்ந்து இன்போசிஸ் இந்தியா முழுவதும் இருக்கும் தனது ஊழியர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து கொண்டு சேர்க்கும் விதமாகச் சுமார் 130 மருத்துவமனைகளுடன் கைகோர்த்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்போசிஸ் அலுவலகத்திலேயே மெடிக்கல் கேம்ப் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வேக்சின் அளித்து வருகிறது இன்போசிஸ் நிர்வாகம்.
பாராட்ட வேண்டிய ஒன்று
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பெரு நகரங்களில் மருத்துவமனையில் படுக்கை இல்லா நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் செயல் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா
கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவில் வர்த்தக வளர்ச்சி அடைந்த மிகச் சில துறைகளில் ஐடி துறை மிக முக்கியமானது. ஊழியர்கள் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைக்கு வந்து பணியாற்ற முடியாத காரணத்தால் பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களை வர்த்தகத்தில் அதிகளவிலான ஆட்டோமேஷன் கொண்டு வர முடிவு செய்த காரணத்தால் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தையும் பெற்றது.
ஐடி ஊழியர்களுக்கு லாபம்
இதேவேளையில் ஐடி ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்பதால் ஐடித்துறையில் வேலைவாய்ப்புகள் எவ்விதமான பாதிப்பையும் அடையவில்லை. சொல்லப்போனால் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழ்நிலை தான் இந்திய ஐடித்துறையில் உருவாகியுள்ளது.