மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பு பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா காலத்தில், வங்கியில் கடன் பெற்றவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடன் தவணையை செலுத்த தேவையில்லை என ரிசர்வ் வங்கிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தது. இதனடிப்படையில் வங்கிகளும் அனுமதி கொடுத்திருந்தன.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய வழக்கு
மத்திய அரசு அறிவித்திருந்த இந்த சலுகை காலத்தில், கடன் தவணையைச் செலுத்தாமல் ஒத்தி வைத்தவர்களுக்கு வட்டிக்கு வட்டி என்று கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி
இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் படி, 2 கோடி ரூபாய் வரையில் கொரோனா காலத்தில் வங்கியில், கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. அவ்வாறு கூட்டு வட்டியுடன் தவணையைச் செலுத்தியவர்களுக்கு நிலையான வட்டி போக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகை நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு தான் பொருந்தும்?
இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையில் வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு தவணை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக்கடன், வாகனக் கடன் என 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கபப்ட்டது.
இவர்களுக்கு சலுகை இல்லை
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையானது, பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குச் சலுகை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படாது. இந்த வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்துக்குள் வரமாட்டார்கள் என்றும் விளக்க மளிக்கப்பட்டுள்ளது.