ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணமே செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் ஐஆர்சிடிசி அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Buy Now Pay Later
பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது தேவையான பொருளை வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து பணத்தை கட்டிக் கொள்ளலாம் என்ற 'Buy Now Pay Later' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த திட்டத்தின்படி நாம் தேவையான பொருளை வாங்கிக்கொண்டு ஒரு மாதம் கழித்து அதற்குரிய பணத்தை கட்டிக்கொள்ளலாம் என்றும் அதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணம் விதிப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Travel Now Pay Later
அதேபோல் ஐஆர்சிடிசி தற்போது கேஷ்-இ என்ற நிறுவனத்துடன் இணைந்து 'Travel Now Pay Later' என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. Travel Now Pay Later என்ற திட்டத்தின் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்து அதன்பின் ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அதற்கான பணத்தை கட்டிக்கொள்ளலாம்.
கேஷ்-இ நிறுவனம்
நாம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது கேஷ்-இ நிறுவனம் நமக்காக நமது டிக்கெட்டுக்கு உரிய பணத்தை செலுத்தி விடும். அதன் பின்னர் நம்மிடம் அந்நிறுவனம் எந்த விதமான கூடுதல் கட்டணம் இன்றி ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வசூல் செய்து கொள்ளும்.
இ.எம்.ஐ வசதி
அதுமட்டுமின்றி நமது ரயில் டிக்கெட் கட்டணத்தை தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் இ.எம்.ஐ வசதியையும் கேஷ்-இ நிறுவனம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 லட்சம் டிக்கெட்டுக்கள்
ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் தினமும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய வசதி பயணிகளுக்கு மேலும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.