இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி அவ்வப்போது சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது என்பதும், இந்த ரயில்களின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வசதி கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஐஆர்சிடிசி முதல் முறையாக சர்வதேச எல்லையை கடந்து செல்லும் 'பாரத் கெளரவ்' என்ற ரயிலை அறிவித்துள்ளது.
இந்த ரயில் இந்தியாவையும் தாண்டி நேபாளம் வரை செல்லும் என்பதும் பயணிகள் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள பல முக்கிய பகுதிகளை இந்த ரயிலில் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரத் கவுரவ்
ஐஆர்சிடிசியின் 'பாரத் கவுரவ்' ரயில், இந்தியாவிலிருந்து சர்வதேச எல்லையைக் கடந்து அண்டை நாடுகளில் ஒன்றான நேபாள நாட்டிற்குச் செல்லும் முதல் சுற்றுலா ரயிலாக மாற உள்ளது. ராமாயண யாத்ரா சர்க்யூட்டின் ஒரு பகுதியாக இந்த ரயில் நேபாளத்திற்கு செல்லும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
எப்போது கிளம்பும்?
ஜூன் 21-ம் தேதி புதுடெல்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில் நேபாளத்தில் உள்ள ராமர் தொடர்புடைய இடங்களான தனுஷா பஹார், பவன் பிகா க்ஷேத்ரா, மா ஜாங்கி ஜன்மஸ்தலி மந்திர் மற்றும் ஸ்ரீ ராம் விவா ஸ்தல் ஆகிய இடங்களுக்கு பயணிக்கும்.
இந்தியா-நேபாளம்
நேபாளத்திற்குப் பயணம் செய்வது மட்டுமின்றி ராமாயண சர்க்யூட்டில் உள்ள பல இந்திய மாநிலங்களையும் 'பாரத் கெளரவ்' சுற்றுலா ரயில் இணைக்கின்றது. சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ராமருடன் தொடர்புடைய புனிதத் தலங்களை சுற்றுலா பயணிகள் செல்வதற்காக இந்த சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
8000 கிமீ பயணம்
உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அயோத்தி, பக்சர், ஜனக்பூர், சீதாமர்ஹி, காசி, பிரயாக், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த ரயில் மொத்தம் 8,000 கி.மீ. பயணம் செய்யும்
வெளியுறவு அமைச்சகம்
'பாரத் கெளரவ்' சுற்றுலா ரயில் ஜூன் 23 அன்று தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் நேபாள அரசு சம்மந்தப்பட்ட ஏஜென்சியின் ஒப்புதலை பெறும் வகையில் வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
நேபாளம் அனுமதி
இந்தியாவிலிருந்து நேபாளம் வரை, பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய புனிதத் தலங்களை உள்ளடக்கிய இந்த ரயிலுக்கு ஒருமுறை அனுமதியை நேபாள அரசிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது. நேபாள அரசின் வெளியுறவு அமைச்சகம், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு இந்த ரயிலுக்கான அனுமதியை வழங்குவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு?
இந்த ரயிலில் அதிகபட்சமாக 600 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும், இந்த ரயிலில் பயணம் செய்து இந்தியா மற்றும் நேபாளத்தை சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு சுமார் ரூ.65,000 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.