டெல்லி: போகிற போக்கை பார்த்தால் நிதிமையச்சர் நிர்மலா சீதாராமனின் வார்த்தைகள் உண்மையாகி விடும் போல. கடந்த வாரம் தான் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், தேஜஸ் ரயில்களை போல 1156 தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்து வரும் பிப்ரவரி 20ம் தேதியன்று மத்திய அரசு வெற்றிகரமாக தனது மூன்றாவது தனியார் ரயிலை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ரயிலையும் வழக்கம் போல ஐஆர்சிடிசி-யே இயக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவரங்கள்
இந்த ரயிலானது இந்தூர் முதல் வாரணாசி வரை செல்லும் என்றும், மேலும் இந்த ரயிலானது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றாவது தனியார் ரயிலின் பெயர் காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் (Kashi Mahakal Express). இந்த ரயில் முழுக்க ஏசி பெட்டிகளை மட்டும் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எப்போது தொடக்கம்?
இந்த தனியார் ரயில் ஒரே இரவில் பயணம் செய்யும் முதல் தனியார் ரயிலாகும். இந்த மூன்றாவது தனியார் ரயில் பிப்ரவரி 20 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்னதாக தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
என்னென்ன அம்சங்கள்?
இந்த ரயில் சிறப்பான இருக்கைகள், எல்இடி விளக்குகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் என்றும் பல வசதிகளுடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தூர் வாராணாசி வழித்தடத்தில் ஒரு தனியார் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஜனவரி 12 அன்று அறிவித்த நிலையில், தற்போது இது செயல்பாட்டுக்கு வர உள்ளது.
முந்தைய தனியார் ரயில்கள்
ஏற்கனவே ஐஆர்சிடிசியால் முதல் தனியார் ரயில் லக்னோ - டெல்லி வரையில் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அது வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கி வருகிறது. இந்த தனியார் ரயில் டெல்லி - லக்னோவை ஐந்தரை மணி நேரத்தில் கடக்கிறது. இதே போல இரண்டாவது தனியார் ரயில் மும்பை அகமதாபாத் வரையில் இயக்கப்படுகிறது. இந்த அதிவேக ரயில் தனது பயணத்தை ஆறு மணி நேரத்தில் இயக்குகிறது.
இதெல்லாம் ரயில்வே தான் இயக்கும்
ரயில்வே சேவை தனியாரால் இயக்கப்படும் என்றாலும், உள்கட்டமைப்பு, பராமரிப்பு செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் தனியார் ரயில்கள் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க உணவு, பொழுதுபோக்கு, நலல் சேவைகள் போன்றவற்றில் சிறப்பானதொரு சேவைகளை பயணிகளுக்கு வழங்கமுடியும் என்றும் கூறப்படுகிறது.
ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம்
தற்போது டாடா ரியால்டி அன்ட் இன்ஃப்ரட்ரக்சர், பாம்பார்டியர், ஹூண்டாய் ரோட்டம் நிறுவனம், சிஏஎஃப் இந்தியா, ஹிட்டாச்சி இந்தியா அன்ட் சவுத் ஆசியா, அதானி போர்ட்ஸ் அன்ட் செஸ், எசெல் குழுமம், டால்கோ, சீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தனியார் ரயிலை இயக்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.